சென்னை: இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக, அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: இலங்கை கடற்படையினரால் 6.8.2025 அன்று அதிகாலை 14 இந்திய மீனவர்கள், அவர்களது மீன்பிடி படகு மற்றும் ஒரு பதிவு செய்யப்படாத நாட்டுப்படகுடன் சிறை பிடிக்கப்பட்டதை ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சரின் தனி கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.
இலங்கை கடற்படையினரால் தமிழ்நாட்டு மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதை முடிவுக்கு கொண்டுவர ஒன்றிய அரசு தூதரக ரீதியாக தலையிட வேண்டும் என்று பலமுறை வேண்டுகோள் விடுத்த போதிலும், இதுபோன்ற கைது சம்பவங்கள் தொடர்வது மிகவும் கவலையளிக்கிறது, 2025ம் ஆண்டில் மட்டும் நடந்த கைது சம்பவங்களில், இது 17வது சம்பவம். தற்போது, 237 மீன்பிடி படகுகளும், 80 மீனவர்களும் இலங்கை அதிகாரிகளின் காவலில் இருக்கிறார்கள். மீனவர்கள், அவர்களின் ஒரே வாழ்வாதாரமான பாரம்பரிய நீர்நிலைகளில் மீன்பிடிக்கும் உரிமையை இழந்துள்ளார்கள். எனவே, கைது செய்யப்பட்ட அனைத்து தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவிப்பதற்கு தேவையான உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அ்்தில் வலியுறுத்தியுள்ளார்.
