சிவகங்கை, பிப். 25: மீன் வளர்க்கும் விவசாயிகள் மரபணு மேம்படுத்தப்பட்ட திலேப்பியா மீன்களை (கிப்ட் திலேப்பியா மீன்கள்) பண்ணை குட்டைகளில் வளர்த்தால் அதிக லாபம் பெறலாம். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளதாவது: மரபணு மேம்படுத்தப்பட்ட திலேப்பியா மீன்கள் குறைந்த பரப்பளவில் அதிக எண்ணிக்கையில் இருப்பு செய்து வளர்க்கலாம். இவ்வகை மீன்கள் அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. மற்ற மீன்களை காட்டிலும் பண்ணைக்குட்டைகளில் இம்மீன்கள் மிக வேகமாக வளரக்கூடியதும், நுகர்வோர் அதிகம் விரும்புவதும் என சிறப்புத்தன்மை பெற்றுள்ளது. நீரின் அமில காரத்தன்மையின் ஏற்றத் தாழ்வுகளையும் அதிகளவில் எதிர்கொண்டு வேகமாக வளரக்கூடியது. எனவே விவசாயிகள் தங்களது பண்ணைக்குட்டைகளில் மரபணு மேம்படுத்தப்பட்ட திலேப்பியா மீன்களை வளர்த்து அதிக அளவில் பயன்பெறலாம்.