திருப்புத்தூர், டிச.5: திருப்புத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட குடியிருப்பு பகுதியில் தேங்கி கிடந்த மழைநீரை அகற்ற வேண்டும் என தினகரன் நாளிதழில் நேற்று படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து மழைநீரை மின் மோட்டார் மூலம் அகற்றி வருகின்றனர். திருப்புத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளில் உள்ள பல தெருக்களில் முறையான ரோடு வசதிகள் மற்றும் முறையான வடிகால் வசதிகள் இல்லாததால் மழைநீர் மற்றும் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் நடைபாதையில் குளம்போல் தேங்கி விடுகிறது. இவ்வாறு தேங்கும் தண்ணீருடன் கழிவுநீரும் சேர்வதால் அந்தப்பகுதிகளில் தொற்று நோய் ஏற்படுகிறது. திருப்புத்தூர் விஜயநகர், பிரபாகர் காலனி பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையால் நீர் செல்ல வழியில்லாமல் நடைபாதையில் தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் உள்ளவர்கள் தினந்தோறும் வீட்டை விட்டு வெளியே சென்றுவர மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இதை பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக சரிசெய்ய வேண்டும் என நேற்று தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.