செங்கம், நவ.14: செங்கம் அடுத்த புதுப்பாளையம் ஒன்றியம் வேளாண்மை துறை மூலம் செயல்பட்டு வரும், நீடித்த நிலையான மானவாரி வேளாண்மை இயக்கம் திட்டத்தின் கீழ், வயல் பகுதிகளில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. மானவாரி விவசாயிகளின் வருமானத்தை பெருக்கும் விதமாக வேங்கை, ரோஸ்வுட், வேம்பு, செம்மரம் உள்ளிட்ட மரக்கன்றுகள் இறையூர், மேல்முடியனூர், மேல்படூர் ஆகிய கிராமங்களில் நடப்பட்டது.
இதில் புதுப்பாளையம் வேளாண்மை உதவி அலுவலர் வேலு, உதவி அலுவலர்கள் சிவகுமார், முருகன், சசிகுமார் மற்றும் ஆத்மா திட்ட அலுவலர்கள் தேவேந்திரன், முத்து ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், நடப்பு சம்பா பருவத்திற்கு நெல் பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர். அப்போது, சம்பா நெல் பயிருக்கு ஒரு ஏக்கருக்கு ₹416 பிரிமீயம் செலுத்த வேண்டும், உரிய ஆவணங்களுடன் பொது சேவை மையங்களில் நாளைக்குள்(வெள்ளி) பயிர் காப்பீடு செய்ய வேண்டும் என வேளாண்மை அதிகாரிகள் விவசாயிகளுக்கு அறிவுறுத்தினர்.