திருவண்ணாமலை, அக்.4: திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் வார்டுகளின் வரையறுக்கப்பட்ட வாக்காளர் பட்டியல் அச்சிடப்பட்டு அனைத்து நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஒன்றியங்களுக்கு அனுப்பும் பணி தொடங்கியது.தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெறாமல் இருக்கும் உள்ளாட்சித் தேர்தல், விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதையொட்டி, தேர்தலுக்கான முன்னேற்பாடுகளில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.மேலும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்குப்பெட்டிகள் ஆகியவற்றை தயார் நிலையில் வைக்கவும், வாக்காளர் பட்டியலை அச்சிட்டு சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு அனுப்பவும் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட நிர்வாகங்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் முன்னேற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த பணிகளுக்காக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு, வந்தவாசி ஆகிய 4 நகராட்சிகள் மற்றும் செங்கம், வேட்டவலம், கீழ்பென்னாத்தூர், கண்ணமங்கலம், களம்பூர், புதுப்பாளையம், தேசூர், பெரமணல்லூர், சேத்துப்பட்டு, ேபாளூர் ஆகிய 10 பேரூராட்சிகள் மற்றும் 18 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள வார்டுகளுக்கான வரையறுக்கப்பட்ட வாக்காளர் பட்டியல் தற்போது அச்சிடும் பணி முடிந்துள்ளது.