சிவகங்கை, மார்ச் 15: மக்களவை தேர்தலையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் பறக்கும்படை செல்லும் வாகனங்களில் ஜபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் வருகிற ஏப்.18ம் தேதி ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான அறிவிப்பு மார்ச்.10ல் வெளியானதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. பல்வேறு நடத்தை விதிகளில் வாகன பரிசோதனையே முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. வாகனங்கள் மூலமாக எடுத்துச் செல்லப்பட்டு பணப்பட்டுவாடா செய்யப்படுவதை தடுக்க சிவகங்கை மாவட்டத்தில் உள்ள செக்போஸ்ட்களில் வாகன பரிசோதனை நடந்து வருகிறது. பகல் மற்றும் இரவு நேரங்களில் போலீசார் வாகன பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, திருப்பத்தூர், மானாமதுரை(தனி), சிவகங்கை ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. பல்வேறு புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தலா மூன்று பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்டம் முழுவதும் 12 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.