சாயர்புரம் அருகே மாயமான பள்ளி மாணவன் சென்னையில் மீட்பு

ஏரல், ஜன. 23: சாயர்புரம் அருகே மாயமான பள்ளி மாணவன் சென்னையில் மீட்கப்பட்டான். தூத்துக்குடி அடுத்த சாயர்புரம் அருகேயுள்ள சின்னநட்டாத்தி முத்தாரம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுயம்புலிங்கம் (44). கட்டிடத் தொழிலாளி. இவரது மனைவி சீதாலட்சுமி (40). தம்பதிக்கு 5 மகன்கள், 2 மகள்கள். இவர்களில் 4வது மகன் லிங்கப்பாண்டி (15) ஏரல் அருகேயுள்ள சிறுத்தொண்டநல்லூர் அரசுப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 15, 16 ஆகிய தேதிகளில் அருகேயுள்ள நாலுமாவடியில் நடந்த கபடிப் போட்டியை பார்த்து வந்தார். இதை தந்தை சுயம்புலிங்கம் கண்டித்தார். இதையடுத்து மறுநாள் (17ம் தேதி) காலை வீட்டை விட்டு வெளியே சென்ற லிங்கபாண்டி  திடீரென மாயமானார். இதனால் பதறிய குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் சாயர்புரம் இன்ஸ்பெக்டர் பட்டாணி, எஸ்.ஐ. சிவசண்முகம் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இதில் லிங்கப்பாண்டி வீட்டை விட்டுச் சென்றபோது அவர் எடுத்துச்சென்ற அவரது அண்ணன் மாரிமுத்துவின் செல்போனின் இருப்பிடத்தை கொண்டு ஆய்வு நடத்தியதில், லிங்கப்பாண்டி சென்னையில் திரிந்தது தெரியவந்தது. தகவலின் பேரில் சென்னை போலீசார் மாணவரை எழும்பூர் பகுதியில் மீட்டு சாயர்புரத்திற்கு அனுப்பி வைத்தனர்.

Related Stories: