காரைக்குடி, டிச. 11: என்எஸ்எஸ் மாணவர் சேர்க்கையில் இந்திய அளவில் தமிழகம் தொடர்ந்து 3 ஆண்டுகளாக முதலிடத்தில் உள்ளது என மண்டல ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார். காரைக்குடி அழகப்பசெட்டியார் அரசு பொறியியல் கல்லூரியில் என்எஸ்எஸ் மாணவர்களுக்கான தேசிய ஒருமைப்பாட்டு முகாம் துவக்க விழா நடந்தது. கல்லூரி ஒருங்கிணைப்பாளர் லோகநாதன் வரவேற்றார். கல்லூரி முதல்வர் இளங்கோ தலைமை வகித்தார். துணை முதல்வர் கணேசன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியை துவக்கி வைத்து மண்டல ஒருங்கிணைப்பாளர் சாமுவேல் செல்லையா பேசுகையில், மத்திய அரசின் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் சார்பில் நாடு முழுவதும் 15 இடங்களில் இதுபோன்ற முகாம்கள் நடத்தப்படுகிறது. தமிழகத்தில் இக்கல்லூரியில் நடத்தப்படுகிறது. 12 மாநிலங்களில் இருந்து 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர். இதில் 7 நாட்கள் நடக்கும் முகாமில் தியானம், தேசிய ஒருமைப்பாடு, நாட்டின் சட்டம் குறித்து பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.