புதிய டாஸ்மாக் கடைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தண்டராம்பட்டு அருகே

தண்டராம்பட்டு, அக்.30: தண்டராம்பட்டு அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் தாசில்தாரிடம் புகார் மனு அளித்தனர்.தண்டராம்பட்டு அடுத்த தொண்டமானூர் எல்லைப்பகுதியில் டாஸ்மாக் கடை திறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் மதுபான கடையின் அருகே உள்ள இளையங்கன்னி கிராமத்தில் வசிக்கும் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் எங்கள் பகுதிக்கு டாஸ்மாக் கடை வேண்டாம் என்று திருவண்ணாமலை கலெக்டரிடம் ஏற்கனவே மனு அளித்திருந்தனர்.இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அப்பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் சுமார் 20க்கும் மேற்பட்டோர் நேற்று தாசில்தார் சுப்பிரமணியனிடம் ‘எங்கள் பகுதிக்கு டாஸ்மாக் கடை வேண்டாம், உடனடியாக திறக்கப்பட்ட கடையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று புகார் மனு அளித்தனர்.மனுவை பெற்ற தாசில்தார் இதுகுறித்து கலெக்டர் மற்றும் மாவட்ட வருவாய் ஆய்வாளர்களுக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.

Related Stories: