சிவகங்கை, செப். 21: பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஜாக்டோ, ஜியோ சார்பில் அக்.4ம் தேதி தற்செயல் விடுப்பு எடுத்து ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடக்க உள்ளது.
சிவகங்கையில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ மாவட்ட உயர்மட்டக் குழு கூட்டம் நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தமிழரசன், இளங்கோ, முத்துப்பாண்டியன் தலைமை வகித்தனர். மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் சங்கர் சங்க முடிவுகளை விளக்கி பேசினார். இதில் மாவட்ட உயர்மட்ட குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். பின்னர் கூட்ட முடிவு குறித்து ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்ததாவது: ‘‘கடந்த 2017 ஜூலை.18 முதல் ஜாக்டோ, ஜியோ சார்பில் தொடங்கிய போராட்டம் பல கட்டங்களாக நடந்தது. ஆனால் தமிழக அரசு எங்களை தொடர்ந்து ஏமாற்றி வருகிறது. எங்களை வலுக்கட்டாயமாக போராட தள்ளுகிறது. சி.பி.எஸ். திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.