பாலியல் புகார் அளித்த அரசு வேளாண் கல்லூரி மாணவிக்கு கல்லூரி நிர்வாகம் நோட்டீஸ் வழங்கியதால் பரபரப்பு

தண்டராம்பட்டு, செப்.7: தண்டராம்பட்டு அரசு வேளாண் கல்லூரியில் உதவி பேராசிரியர் மீது பாலியல் புகார் அளித்த மாணவி, கல்லூரிக்கு கல்வி கட்டணம் செலுத்தவில்லை, சீருடை அணியவில்லை என கூறி கல்லூரி நிர்வாகம் நோட்டீஸ் வழங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு தாலுகா, வாழவச்சனூர் அரசு வேளாண் கல்லூரியில் சென்னையை சேர்ந்த 21 வயது மாணவி, உதவி பேராசிரியர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் அதற்கு 2 உதவி பேராசிரியைகள் உடந்தையாக இருந்ததாகவும் புகார் அளித்திருந்தார். அதன்பேரில், உதவி பேராசிரியர் தங்கபாண்டியன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதுதொடர்பாக, கோவை வேளாண் பல்கலைக்கழக இயக்குனர் டாக்டர் சாந்தி தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் விசாரணை நடத்தினர்.இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவி தன்னை சக மாணவ, மாணவிகள் புறக்கணிப்பதாகவும், தன்னை பார்த்தவுடன் பேராசிரியைகள் பாடம் நடத்தாமல் வகுப்பைவிட்டு வெளியேறியதாகவும் புகார் தெரிவித்தார். நேற்று முன்தினம் நடந்த களஆய்விற்கும் மாணவியை பேராசிரியர்கள் அழைத்து செல்லவில்லை. இதுகுறித்து, கல்லூரி டீனிடம் விளக்கம்கேட்டு, பின்னர் மாணவி களஆய்வுக்கு சென்றதாக கூறப்படுகிறது.இந்நிலையில், பாலியல் புகார் அளித்த மாணவி நேற்று காலை வழக்கம்போல் கல்லூரிக்கு சென்றார். அப்போது கல்லூரி நிர்வாகம் சார்பில், கல்வி கட்டணம் ₹8,920ஐ இதுவரை கட்டவில்லை எனவும், கல்லூரிக்கு வரும்போது சீருடை அணியாதது ஏன்? எனவும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால், மாணவி அந்த நோட்டீசை வாங்காமல் ‘நான் கடந்த 2ம் தேதி ஆன்லைன் மூலம் கல்வி கட்டணத்தை செலுத்திவிட்டேன். அதற்கான மெசேஜ் வங்கியிலிருந்து வந்துள்ளது.’ எனக்கூறி செல்போனில் உள்ள குறுஞ்செய்தியை காட்டினாராம். அதற்கு நிர்வாகம் எந்த பதிலும் தெரிவிக்கவில்லையாம்.

வெளியேற்றுவதில் கல்லூரி நிர்வாகம் குறியாக உள்ளது

இதுகுறித்து, நிருபர்களிடம் மாணவி கூறுகையில், `புகார் கொடுத்த என்னை கல்லூரியில் இருந்து வெளியேற்றியபோது சீருடையை விடுதியிலேயே விட்டுவிட்டேன். அதனை கல்லூரி நிர்வாகம் வெளியே வீசிவிட்டது. பின்னர், தேர்வு எழுத வரும்போது உரிய விளக்கத்தை கூறினேன். இதனை ஏற்றுக்கொண்ட அவர்கள், பரவாயில்லை என தேர்வு எழுத அனுமதித்தனர். ஆனால், தற்போது கல்லூரிக்கு வரும்போது சீருடை கேட்டு நோட்டீஸ் அளிக்கின்றனர். அவர்கள் அளித்த விளக்க கடிதத்தை நான் வாங்கவில்லை. என்னை வெளியேற்றுவதிலேயே கல்லூரி நிர்வாகம் குறியாக உள்ளது' என்றார்.அப்போது மாணவியுடன் இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் அண்ணாமலை உடன் இருந்தார். இதற்கிடையில் மாணவிக்கு ஆதரவாக மாதர் சங்கம், இந்திய மாணவர்கள் சங்கம் இணைந்து வரும் 10ம் தேதி திருவண்ணாமலை ரவுண்டானா அருகே ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: