உடல் சூட்டை தணிக்கும் வெந்தயம்

நன்றி குங்குமம் தோழி

நாம் அன்றாட உணவில் பயன் படுத்தும் பொருட்களில் வெந்தயம் முக்கிய பங்கு வகிக்கிறது. இது உடலில் உள்ள ரத்த ஓட்டத்தை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது. நம் உடலுக்கு தேவையான அனைத்து விதமான பயன்களும் வெந்தயத்தில் உள்ளது. வெந்தய விதைகளில் புரதம், சர்க்கரை, வைட்டமின், உலோகச்சத்து, அமினோ அமிலங்கள் ஆகியவை அடங்கியிருக்கின்றன. வெந்தய இலைகளிலும், தண்டுகளிலும் கால்சி யம், இரும்புச்சத்து நிறைந்துள்ளது. உடலுக்கு குளிர்ச்சி அளிப்பதுடன் உடலை சமநிலையில் வைக்கவும் வெந்தயம் பயன்படுகிறது. இது போன்ற  நன்மைகள் கொண்ட வெந்தயத்தை எவ்வாறு பயன்படுத்தலாம். அதனால் ஏற்படும் பலன்கள் என்ன என்று தெரிந்து கொள்வோம்.

இரவில் வெந்தயத்தை ஊற வைத்து காலையில் எழுந்து அந்த தண்ணீரை பருகி வந்தால் உடல் குளிர்ச்சியாகவும், மலக்சிக்கலை போக்கவும் நல்ல மருந்தாகவும் பயன்படுகிறது.

கோடைக்காலத்தில் மோரில் வெந்தயத்தை ஊற வைத்து குடித்து வர நீரிழிவு, வயிற்றுப்புண், வாய் துர்நாற்றம் உட்பட பல நோய்கள் குணமாகும்.

வெந்தயத்தை அரைத்துத் தீப்பட்ட இடங்களில் தடவ எரிச்சல் குறைவதோடு சீக்கிரம் ஆறும் தன்மை கொண்டது. வயிற்றுப்போக்கும் குணமாகும், தாய்ப்பால் பெருக்கும் தன்மையும் இதற்கு உண்டு.

சர்க்கரை வியாதியை குறைக்கும் மருத்துவ குணமும் இதில் உள்ளது. தினமும் இரவு சிறிதளவு வெந்தயத்தை தயிரில் ஊறவைத்து மறுநாள் காலை வெறும் வயிற்றில் சாப்பிடலாம். இதனால் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும்.

வெந்தயக் கீரையை கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால் வாய்வு தொல்லையிலிருந்து விடுபடலாம். வயிற்று உப்பிசம் இருந்தாலும் குறையும்.

வெந்தயக் கீரையைப் பொடியாக நறுக்கி வதக்கி, இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு, சுண்டக்காய்ச்சி, இருவேளையும் அரை டம்ளர் வீதம் குடித்து வந்தால் நெஞ்சுவலி பூரணமாகக் குணமாகும்.

பெண்களுக்கு முடி கொட்டும் பிரச்சனையில் இருந்து விடுபட வெந்தயம் உதவுகிறது. இரவு ஒரு மேசைக்கரண்டி வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைக்கவும். காலை அதை விழுதாக அரைத்து அரை மணி நேரம் தலையில் தடவி குளித்துவந்தால் முடி உதிர்வது குறைவதோடு, அடர்த்தியாக வளரவும் செய்யும். பொடுகு பிரச்சனையால் ஏற்படும் அரிப்பு நீங்கி முடி பளபளப்பாக இருக்கும்.

வெந்தய விழுதை பருக்கள் மீது தடவ பருக்கள் மறையும்.

- கவிதா பாலாஜிகணேஷ், சிதம்பரம்.

Related Stories: