தீபாவளிக்குப் பட்டுப்புடவை வாங்கப் போகிறீர்களா?: சில டிப்ஸ்கள்

நன்றி குங்குமம் தோழி

வாசகர் பகுதி

* தங்க நகைகளைச் சுத்தம் செய்யப் பயன்படுத்தும் பூந்திக் கொட்டைகளை இளம் சூடான நீரில் அரை மணி நேரம் ஊற வைத்து பிறகு  கசக்கினால் வெண்மையான நுரை வரும். அதில் பட்டாடைகளை நன்கு ஊற வைத்து அலசினால் பளபளவென்று இருக்கும். நீருடன் சிறிது  எலுமிச்சைச்சாறு கலந்துவிட்டால் மிகவும் சுத்தமாகவும் நல்ல வாசனையுடனும் இருக்கும். உப்பு கரைத்த நீரில் அலசினால் பட்டு  மிருதுவாக இருக்கும்.

* கடலை மாவை நீரில் நன்கு கரைத்து அதில் பட்டுத் துணிகளை நனைத்து ஊற வைத்துக் கசக்கினாலும் அழுக்குகள் அகன்று, பட்டான  நிறமும் பளபளப்பும் நீடித்திருக்கும்.

* பட்டாடைகளை அலசும்போது நீரில் ஒரு ஸ்பூன் கிளிசரின் கலந்து விட்டால் சுருக்கம் இருக்காது.

*பட்டாடைகளின் மேல் படிந்துள்ள எண்ணெய் கறை, மை கறை போன்றவற்றைப் போக்க அப்பகுதியை சிறிதளவு பெட்ரோலில் நனைத்துத்  துடைத்தால் போதும் அல்லது கறை படிந்த பகுதியில் சிறிது யூகலிப்டிஸ் தைலம் தேய்த்துவிட்டுப் பிறகு துவைத்தால் கறை  மறைந்துவிடும். பட்டுப்புடவைகளுக்கு உலர் சலவை எனப்படும் பெட்ரோல் சலவை சிறந்தது.

* உலர் சலவை செய்ய நீங்கள் தேர்ந்தெடுக்கும் கடையில் சரியான முறையில் பெட்ரோல் சலவை செய்கிறார்களா எனத் தெரிந்துகொள்ள  வேண்டியது மிக அவசியம். பட்டுப் புடவைகளுக்கு டிடர்ஜென்ட் சோப் அல்லது சோப் பவுடர் உபயோகிக்கக் கூடாது.

* பட்டுப் புடவையை அயர்ன் செய்யும்போது வழக்கமான முறையில் செய்ய வேண்டாம். பட்டுப்புடவையைத்  திருப்பிப் போட்டு  (பின்பக்கம்) பிறகு மேலே துணி போட்டு மிதமான சூட்டில் அயர்ன் செய்ய வேண்டும்.

* பட்டுப் புடவையை உடுத்தி தீபாவளி கொண்டாடிய பிறகு உடனடியாக நிழலில் உலர்த்த வேண்டும்.

* பட்டுப் புடவையை மடிக்கும்போது அதிக கவனம் தேவை. ஒவ்வொரு முறை மடிக்கும்போதும் வெவ்வேறு விதமாக மடித்து வைக்க  வேண்டும்.

* பட்டுப் புடவைகளை பிளாஸ்டிக் கவரிலோ அட்டைப் பெட்டியிலோ போட்டு வைக்காதீர்கள். ஜரிகை கறுத்து விடும். ஜவுளிக் கடையில்  தரும் துணிப்பைகளில் போட்டு வைக்கலாம். அல்லது ஒரு வெள்ளை வேஷ்டியில் சுற்றி வைக்கலாம்.

* ஃபால்ஸ் வைத்துத் தைப்பது சேலையைப் புதிதுபோல் வைத்திருக்க உதவும்.

* பட்டு பிளவுஸ்களை பற்றி அக்கறை கொள்ளுங்கள். தரமான லைனிங் துணி கொடுத்து பிளவுஸ் தைக்க வேண்டும்.

* பட்டுச்சேலை முந்தியில் நெட் வைத்துத் தைக்கலாம். தரமான லைனிங் துணி கொடுத்து பிளவுஸ் தைக்க வேண்டும். நெட் வைத்து  தைப்பது மிக உபயோகமாக இருக்கும். எப்படி என்கிறீர்களா? கைவளையல், கொலுசு மற்றும் கால் வெடிப்பு ஆகியவற்றில் முந்தியில்  இருக்கும் ஜரிகை சிக்காமல் இருக்கும்.

* பட்டுச் சேலையின் முந்திப் பக்கம் முடி இடுவது பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.

* பட்டுச் சேலையின் உள்பக்கம் ஓரம் அடித்தல் அல்லது ஓவர்லாக் செய்தல் மிக அவசியம்.

* அசல் வெள்ளி ஜரிகையை விரல்களால் மெதுவாகத் தேய்க்கும்போது மிருதுவாக இருக்கும். அசல் ஜரிகையை சிலேட்டில் தேய்த்தால்  சாம்பல் நிறமாகத் தெரியும்.

* அசல் பட்டின் இழையை லேசான தீயில் பொசுக்கும்போது பூச்சியின் வாடை வரும். செயற்கைப் பட்டிலிருந்து வாடை வராது.

* பட்டு முதன்முதலாக ஷு-லிங்-ஷு என்னும் சீன அரசியால் கண்டுபிடிக்கப்பட்டது.

* கூர்ஜா தேசம் என்று சொல்லப்படும் குஜராத்தில்தான் அழகிய பட்டாடைகள் முதலில் தயாரிக்கப்பட்டு வந்தன. பின்பு கலிங்கத்தில் பட்டு  உற்பத்தி அதிகமாகி கடல் வாணிபத்தில் முக்கிய பொருளாகியது.

* கலிங்கம் என்ற சொல்லுக்கு பட்டு என்றே அர்த்தம். தென் இந்தியாவில் குறிப்பாக காஞ்சிபுரத்தில் உற்பத்தியாகி பெரும் புகழையும்  பெயரையும் பெற்றது.

* காஞ்சிபுரம் பாலாற்று தண்ணீரில் அலசப்படும் பட்டு நூல்கள் பளபளப்பாகவும், சோழத்தட்டைகளை நெருக்கிய தறிகளில்  நெய்யப்படுவதால் நூல் இழைகள் நெருக்கமாகி இறுக்கமாகி கனமாகவும் காஞ்சிபுரம் பட்டு இருக்கிறது.

* பட்டு என்பது பட்டுப்பூச்சி தன் இருப்பிடத்திற்காக தன் வாயிலிருந்து சுரக்கும் பசை போன்ற மெல்லிழைகளாலான கூடு ஆகும்.விலை கூட வாங்கும் பட்டாடைகளை கவனமாகப் பாதுகாத்து உடுத்தி மகிழ்வோம்.

- ஆர்.ராமலெட்சுமி, திருநெல்வேலி

Related Stories: