இதம் தரும் ஆரோக்கிய உணவுகள்

மழை, பனி போன்ற குளிர்காலத்தில் கண்ட நொறுக்குத்தீனிகளையும் சாப்பிடத் தோன்றும். அப்படி ஆரோக்கியத்தைக் கெடுக்கும் உணவுகளை எடுத்துக் கொள்ளாமல் நோய் எதிர்ப்பு சக்தி உள்ள இரண்டு உணவுகளைப் பற்றியும், அதன் செய்முறையையும் உணவியல் நிபுணரான வினிதா கிருஷ்ணன் இங்கே வழங்குகிறார்.

முருங்கைக் கீரை சூப்

தேவையான பொருட்கள்:

முருங்கைக் கீரை     - 100 கிராம்

சின்ன வெங்காயம்     - 10 கிராம்

கடுகு, சீரகம்,

தவிட்டு எண்ணெய்,

கடுகு, மஞ்சள் பொடி,

மிளகுப் பொடி,

உப்பு     - தேவையான அளவு.

செய்முறை:

50 கிராம் முருங்கைக் கீரையை மூன்று டம்ளர் தண்ணீர் விட்டு தேவையான அளவு உப்பு போட்டு இரண்டு டம்ளர் அளவு கொதிக்கவைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். கடாயில் எண்ணெயை விட்டு கடுகு, வெங்காயம், சீரகம் கறிவேப்பிலை, மஞ்சள் போட்டு தாளித்து 50 கிராம் முருங்கைக் கீரையை அதில் போட்டு வதக்க வேண்டும்.

கீரை நன்றாக வதங்கியவுடன் அதில் கொதித்த முருங்கைக் கீரை சாறினை அதில் ஊற்ற வேண்டும். ஒரு டம்ளர் ஆகும் வரை கொதிக்கவிட்டு இறக்கி அதில் தேவையான அளவு மிளகுப் பொடியை தூவினால் முருங்கைக்கீரை சூப் ரெடி. பயன்கள் முருங்கைக் கீரையை சூப்பாக வைத்து சாப்பிடும்போது எளிதில் ஜீரணமாகிவிடுகிறது. இது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தரும் ஆன்டி ஆக்ஸிடென்டாகவும் ஆன்டிபயாட்டிக்காகவும் இருந்து நம்மைப் பாதுகாக்கிறது. ரத்தத்தை சுத்திகரித்து ஹீமோ குளோபினை அதிகரிக்கச் செய்கிறது.

ரத்தசோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறச் செய்கிறது. இது உடலுக்குத் தேவையான வெப்பத்தைத் தந்து மழை மற்றும் குளிருக்கேற்ற உணவாக இருக்கிறது. இது பெரியவர் சிறியவர் என அனைவரும் பருகலாம். உடலுக்குத் தேவையான 20 அமினோ அமிலங்களில் 18 சதவீதம் முருங்கைக் கீரையில் உள்ளது. ஹீமோகுளோபின் அளவு இதனால் பல மடங்கு அதிகரிக்கும். வைட்டமின் ‘சி’ கிடைக்கிறது. உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வளர்க்கிறது.

பாலக்கீரை-பாகற்காய் பக்கோடா

தேவையான பொருட்கள்:

பாகற்காய்     - 50 கிராம்

பாலக்கீரை     - 50 கிராம்

கடலை மாவு     - 100 கிராம்

அரிசி மாவு     - 50 கிராம்

சின்ன வெங்காயம்     - 10 கிராம்

நசுக்கப்பட்ட பூண்டு     - 10

சோம்பு     - 5 கிராம்

இஞ்சி     - 10 கிராம்

சீரகம்     -  5 கிராம்

எண்ணெய்     - தேவைக்கு

மஞ்சள் பொடி     - தேவையான அளவு.

செய்முறை:

பாலக்கீரையை தனித்தனியாக எடுத்து அலசி வைத்துக் கொள்ள வேண்டும். பாகற்காயையும் வட்ட வடிவில் வெட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். கடலை மாவையும், அரிசி மாவையும் நன்றாக நீர்விட்டு வடை சுடும் பதத்தில் பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும்.அதில் சின்ன வெங்காயம், இஞ்சி, நசுக்கப்பட்ட பூண்டு, மஞ்சள், சீரகம் தேவையான அளவு உப்பு போன்றவற்றை சேர்த்து பிசைய வேண்டும்.

சின்னதாக ரவுண்டு சேப்பில் வெட்டி வைத்து கொள்ள வேண்டும். இப்போது கடாயில் தவிட்டு எண்ணெயை நன்றாக கொதிக்க வைத்து, கடலைமாவில் பாலக்கீரையையும், பாகற்காயையும் ஒவ்வொன்றாக மாவில் நனைத்து போட வேண்டும். பொன்னிறமாக மாறும்போது அதை எடுத்துவிட வேண்டும். குறிப்பாக, எண்ணெயில் பொரிக்கும்போது பாலக்கீரை, பாகற்காயின் கசப்பு, துவர்ப்பு சுவை நீங்கிவிடாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும்.

பாலக்கீரையில் ரத்தத்தின் சிவப்பு அணுக்கள், ஹீமோகுளோபின் ஆகியவை அதிகமாக உற்பத்தியாக உதவுகிறது. இதில் இரும்புச்சத்து, பீட்டா கரோட்டின், ஃபோலிக் அமிலம், கால்சியம் போன்றவை அடங்கியுள்ளன.இக்கீரையில் இருக்கும் பொட்டாசியம் நரம்பு மண்டலத்துக்கு வலுவூட்டுகிறது, ரத்த அழுத்தம் சீராக இருக்கவும் பயன்படுகிறது. உடலுக்குத் தேவையான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும், வைட்டமின்களும் பாகற்காயில் ஏராளமாக நிறைந்துள்ளன.

வைட்டமின் ஏ, பி, சி, பீட்டா-கரோட்டின் போன்ற ஃப்ளேவோனாய்டுகள், லூடின், இரும்புச்சத்து, ஜிங்க், பொட்டாசியம், மாங்கனீசு, மக்னீசியம் போன்ற தாதுக்கள் பாகற்காயில் நிறைந்துள்ளன.இதன் கசப்புச்சுவை உடலில் உள்ள நச்சுக்களை போக்கி உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைத் தருகிறது. மழைக்காலத்தில் தொற்றுநோய் ஏற்படாத வண்ணம் பார்த்துக் கொள்கிறது!

- க.இளஞ்சேரன்

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: