கொல்கத்தா: வானில் ஒரே உயரத்தில் நேருக்கு நேர் வந்த விமானங்கள், கடைசி நேரத்தில் கருவிகளின் எச்சரிக்கையால் மோதல் தவிர்க்கபட்டு விமானங்கள் வெவ்வேறு திசையில் சென்றன.சாலையில் சில நேரங்களில் நேருக்கு நேராக வாகனங்கள் வந்து, கடைசி நேரத்தில் மோதல்கள் தவிர்க்கப்படும் நிலை சர்வசாதாரணம். ஆனால், நடுவானில் இதுபோன்ற சம்பவம் சில நாட்களுக்கு முன் கொல்கத்தா வான்பரப்பில் நடந்துள்ளது. கொல்கத்தாவில் இருந்து டார்ஜிலிங்குக்கு இண்டிகோ நிறுவன விமானம் ஒன்று சென்றுள்ளது. அதே நேரத்தில் அதற்கு எதிர் திசையில் ஏர் ஏசியா விமானம் கொல்கத்தாவுக்கு வந்துள்ளது. இரண்டு விமானத்திலும் மொத்தம் 400 பயணிகள் இருந்துள்ளனர்.
29 ஆயிரம் அடி உயரத்தில் இரு விமானங்களும் பறந்துக் கொண்டிருந்தபோது, திடீரென விமானத்தில் இருக்கும் எச்சரிக்கை கருவிகள் பெரும் அலறல் சப்தத்தை எழுப்பி உள்ளன. விமானிகள் கருவிகளை சோதனை செய்தபோது, எதிரே ஒரே நேர்க்கோட்டில் மற்றொரு விமானம் வந்துக் கொண்டிருப்பது, இரு விமானத்தில் இருந்த விமானிகள் கண்டுபிடித்தனர்.இதையடுத்து, விமானிகள் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்து, அவர்கள் அளித்த உத்தரவின் கீழ் திசையையும் உயரத்தை மாற்றி பறக்க ஆரம்பித்தனர்.
எச்சரிக்கை கருவிகள் பல கி.மீ. தூரத்தில் இருக்கும்ேபாதே எச்சரிக்கை செய்துவிடும் என்பதால், விமானிகள் உடனடியாக சுதாரிக்க முடியும். ஆனால், கருவிகள் செயல்படாமல் போய் அசம்பாவிதம் நடந்திருந்தால் பயணிகளின் உயிருக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டிருக்கும்.வழக்கமாக விமானக் கட்டுப்பாட்டு அறையில் இருக்கும் அதிகாரிகளின் உத்தரவின்படிதான் விமானிகள் உயரம், திசை மற்றும் வேகத்தை கட்டுப்படுத்துவார்கள். இதனால் விமானக் கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட இரு விமானங்களுக்கும் தவறான உத்தரவை பிறப்பித்தார்களா என்று விசாரணை நடந்து வருகிறது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி