ஆசிரியர்களைக் கொண்டாட ஒரு சிறப்பு தினம்!

எந்த ஒரு மனிதனும் குறிக்கோள், லட்சியம் இல்லாமல் வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்ந்தால் அதில் கால விரயமும் களைப்பும் மட்டுமே மிஞ்சும்.  இலக்கு இல்லாத எந்த ஒரு செயலாக இருந்தாலும் அது வீண் முயற்சியாகத்தான் முடியும். இந்த நிதர்சனமான உண்மைகளை வளரும் தலைமுறையான மாணவ சமூகத்தின் மனதில் நன்கு பதியவைத்து மாணவர்களைச் சீரிய வழியில் வழிநடத்துவதில் ஆசிரியர்களின் பங்கு விசாலமானது என்பதில் நிச்சயம் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

சர்வதேச ஆசிரியர் தினம்

ஆசிரியர்கள் தனது வழிகாட்டலின் மூலம் கிடைக்கும் வெற்றியை பார்த்து அடையும் மகிழ்ச்சிக்கு அளவில்லை. தன்னிடம் ஒப்படைக்கப்படும் மாணவனை நல்ல மாணவனாக ஆக்குவதோடு, நல்ல மனிதனாக மாற்றும் பொறுப்பும் ஆசிரியர்களுக்கு இருக்கிறது. அதேபோல் ஆசிரியர்கள் என்பவர்கள் நல்ல மாணவ சமூகத்தை உருவாக்குபவர்கள் மட்டும் அல்ல, மாறாக நாளைய தலைமுறையை உருவாக்குபவர்கள் என்பது மிகையாகாது. அப்படிப்பட்ட ஆசிரியர்களை சிறப்பிக்கும் நோக்கத்துடனும், அவர்களின் சேவைக்கு அங்கீகாரம் அளிக்கும் விதமாகவும் யுனெஸ்கோ மற்றும் உலகத் தொழிலாளர் அமைப்பு (ILO-International Labour Organisation) இணைந்து அக்டோபர் 5ம் தேதியை அனைத்துலக ஆசிரியர் தினமாகக் கொண்டாட அறிவித்தது. ஆசிரியர் தினம் சில நாடுகளில் விடுமுறை நாளாகவும், சில நாடுகளில் பணி நாளாகவும் உள்ளது. 1994ம் ஆண்டு முதல் உலக ஆசிரியர்கள் தினம் கொண்டாடப்பட்டுவருகிறது. அதேநேரம், சில நாடுகள் அக்டோபர் 6ம் தேதியை ஆசிரியர் நாளாகக் கொண்டாடுகின்றன.

தேசிய ஆசிரியர் தினம்

ஒரு நல்ல ஆசிரியராக தமது இறுதிக் காலம் வரை வாழ்ந்து காட்டி, மாபெரும் தத்துவமேதையாக விளங்கிய டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 5ஆம் தேதி ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் தினமாக இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டுவருகிறது. ஒழுக்கம், பண்பு, ஆற்றல், ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, வாழ்க்கை, பொது அறிவு என அனைத்தையும் மாணவர்களுக்குச் சிறந்த முறையில் கற்பித்து, ஒரு உண்மையான வழிகாட்டியாக விளங்குபவர்கள் ஆசிரியர்கள். அப்படிப்பட்ட ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் ஆசிரியர் தினம் கொண்டாடுகிறோம். வாழ்க்கை என்ற பாடத்தைக் கற்றுத்தந்து, மாணவர்களுக்கு உண்மையான வழிகாட்டியாக விளங்கி, ஒவ்வொரு மாணவர்களையும், சிறந்த மனிதர்களாக்குவது ஆசிரியர்கள்தான்.

 

ஆசிரியர் பணியின் சிறப்பு

ஆசிரியர் பணி என்பது வெறும் கல்வியை மட்டும் போதிப்பது இல்லை; ஒழுக்கம் பண்பு, ஆன்மிகம், பொது அறிவு என அனைத்தையும் மாணவர்களுக்கு எடுத்துக்கூறி, அவர்களைச் சிறந்த மனிதர்களாக்கும் உன்னதப் பணியாகும். அப்படிப்பட்ட தெய்வீகமான பணியை மாணவர்களுக்கு அளிக்க, தன்னலமற்ற, தியாக மனப்பான்மை கொண்டவராக இருந்தால் மட்டும் போதாது; கற்பிக்கும் தொழிலை நேசிப்பவராகவும் இருக்க வேண்டும். அவர்கள்தான் உண்மையான ஆசிரியர்கள்.

சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் வெற்றிப்படிகள்

தன்னுடைய வாழ்வில் ஆசிரியர் பணியை புனிதமாகக் கருதி, பிற ஆசிரியர்களுக்கு முன்மாதிரியாக, ஒரு நல்ல ஆசிரியரால் எவ்வளவு தூரம் பயன்பட முடியும் என்பதைத் தமது இறுதிக் காலம் வரை வாழ்ந்துகாட்டி, ஒரு மாபெரும் தத்துவமேதையாக உலகிற்குத் தன்னை வெளிப்படுத்தியவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன். சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கள், 1888 ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி திருத்தணி அருகே உள்ள சர்வபள்ளி என்ற இடத்தில் ஒரு ஏழை பிராமண குடும்பத்தில் பிறந்தார். தத்துவத்தை முதற்பாடமாகக் கொண்டு இளங்கலைப் பி.ஏ. பட்டமும், பின்னர் முதுகலைப் பட்டமும் பெற்றவர். சென்னையில் உள்ள பிரசிடென்சி கல்லூரியில் உதவி விரிவுரையாளராகத் தன்னுடைய ஆசிரியர் பணியைத் தொடர்ந்தார். 1918 ஆம் ஆண்டு மைசூர் பல்கலைக்கழகத்தின் தத்துவப் பேராசிரியராகத் தேர்வு செய்யப்பட்ட இவர், 1921ல் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் தத்துவப் பேராசிரியராகப் பரிந்துரைக்கப்பட்டார். அதன் பிறகு 1923ல் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் அற்புதப் படைப்பான ‘இந்தியத் தத்துவம்‘ வெளியிடப்பட்டது. இப்புத்தகம், பாரம்பரியத் தத்துவம் இலக்கியத்தின் ஒரு தலைசிறந்த படைப்பாகப் போற்றப்பட்டது.

இந்துமதத் தத்துவங்கள் பற்றி விரிவுரைகள் வழங்க, ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம், டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு அழைப்பு விடுத்தது. பல மேடைகளில், அவரது சொற்பொழிவுகளை இந்தியா சுதந்திரம் அடைவதற்கு ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தினார். மேற்கத்திய சிந்தனையாளர்களின் அனைத்துக் கூற்றுகளும் பரந்த கலாசாரத்திலிருந்து இறையியல் தாக்கங்கள் சார்புடையதாகவே உள்ளது என்று வாதிட்டார். இந்தியத் தத்துவங்களைத் தரமான கல்வி வாசகங்கள் உதவியுடன் மொழிபெயர்த்தால், மேற்கத்தியத் தரங்களையும் மிஞ்சிவிடும் என்றுரைத்தார். இவ்வாறு இந்தியத் தத்துவத்தை, ‘உலக வரைபடத்தில் வைத்த ஒரு மாபெரும் தத்துவஞானி’என டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களைக் கூறலாம்.

1931 ஆம் ஆண்டு, டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள், ஆந்திரப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1939 ஆம் ஆண்டு, பனாரஸ் இந்து மதப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரானார். 1946ல், அவர் யுனெஸ்கோவின் தூதுவராக நியமிக்கப்பட்டார். சுதந்திரத்திற்குப் பின், 1948ல் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களைப் பல்கலைக்கழகக் கல்வி ஆணையத் தலைவராகுமாறு கேட்டுக்கொண்டது. இந்தியக் கல்வி முறையின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், சிறப்பான கல்வித் திட்டத்தை வடிவமைக்கவும், ராதாகிருஷ்ணன் அவர்களுடைய குழுவின் பரிந்துரைகள் பெரிதும் உதவியது.

ஆசிரியர் தினக் கொண்டாட்டம்

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ‘ஆசிரியர் தின’ நன்னாளில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி எனப் பல்வேறு போட்டிகளை நடத்தி, மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்குவார்கள். மேலும், சிறந்த ஆசிரியர்களைக் கௌரவிக்கும் வண்ணமாக ஆண்டுதோறும் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் சார்பில் அனைத்து மாநிலங்களிலுமிருந்து நல்லாசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டுவருகிறது. மாணவர்களும், அந்நாளில் தங்களுக்குப் பிடித்த ஆசிரியர்களுக்கு அன்பளிப்புகளை வழங்கி, வாழ்த்துகள் தெரிவிப்பர்.

- முத்து

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: