அஜ்மானில் மரணமடைந்த பீகார் வாலிபர் உடல் துபாய் ஈமான் அமைப்பின் முயற்சியால் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு

அஜ்மான்: அஜ்மான் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சத்தார் அன்சாரி (வயது 41) பணிபுரிந்து வந்தார். அவர் உயர் ரத்த அழுத்தம் காரணமாக கோமோ நிலையில் அஜ்மான் ஷேக் கலீபா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி கடந்த 27.02.2018 மரணமடைந்தார்.

அவர் பணிபுரிந்த நிறுவனம் அதற்கான ஏற்பாடுகளை செய்ய முன்வரவில்லை. எனவே அவரது சகோதரர் மகபூப் ஆலம் துபாய் ஈமான் அமைப்பை தொடர்பு கொண்டார். ஈமான் அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் பி.எஸ். எம். ஹபீபுல்லா கான், பொதுச்செயலாளர் ஏ. ஹமீது யாசின், துணைப்பொதுச்செயலாளர் முகைதீன் அப்துல் காதர் உள்ளிட்டோரின் ஆலோசனையின் பேரில் மக்கள் தொடர்பு மற்றும் ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத் இந்த பணிகளை துபாய் இந்திய துணை தூதரகத்தின் உதவியுடன் மேற்கொண்டார்.

இந்த பணியில் சமூக ஆர்வலர் செந்தமிழ் செல்வன் உள்ளிட்டோர் ஆர்வத்துடன் பங்கேற்று உடலை அனுப்ப தேவையான ஆவணங்கள் விரைவாக கிடைக்க உதவி செய்தனர். மறைந்த சத்தார் அன்சாரியின் உடல் வெள்ளிக்கிழமை 16.03.2018 அதிகாலை ஏர் இந்தியா விமானம் மூலம் புதுடெல்லி வழியாக பாட்னாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த பணியில் தங்களுக்கு உதவி செய்த சத்தார் அன்சாரியின் குடும்பத்தினர் துபாய் ஈமான் அமைப்புக்கு நன்றி தெரிவித்தனர்.

Related Stories: