விளையாட்டுகளுக்கு கோடை கால பயிற்சி முகாம்

கிருஷ்ணகிரி, ஏப்.28: கிருஷ்ணகிரியில் மாவட்ட அளவிலான விளையாட்டுகளுக்கு கோடைகால பயிற்சி முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் மகேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளுக்கான கோடை கால பயிற்சி முகாம், வரும் மே 2ம் தேதி முதல் 16ம் தேதி வரை 15 நாட்கள், கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்பயிற்சி முகாமில் பள்ளி மாணவ, மாணவிகள், விளையாட்டு வீரர், வீராங்கனைகள், பாரதியார் தின விளையாட்டு போட்டிகள், குடியரசு தின விளையாட்டு போட்டிகள் மற்றும் இதர விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டவர்கள் மற்றும் உலகத்திறனாய்வு தடகள போட்டிகளில் கலந்துகொண்டவர்கள் அனைவரும் கலந்துகொள்ளலாம்.

தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, ஹாக்கி, வாலிபால், டேக்வோண்டோ, ஹேண்ட்பால் மற்றும் ஜூடோ ஆகிய விளையாட்டுகளில் ஆண், பெண் இருபாலருக்கும் காலை 6 மணி முதல் 8 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 7 மணி வரையிலும் பயிற்சி முகாம் நடைபெறும். மேற்கண்ட விளையாட்டுகளுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்படவுள்ளது. எனவே, முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் மே 2ம் தேதி காலை 7 மணிக்கு கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் ஆஜராகி பயிற்சி பெற்று பயனடையலாம். இவ்வாறு மாவட்ட விளையாட்டு அலுவலர் மகேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

The post விளையாட்டுகளுக்கு கோடை கால பயிற்சி முகாம் appeared first on Dinakaran.

Related Stories: