காட்டுப்பன்றிக்கு வைத்த வெடியை கடித்த பசுமாட்டின் வாய் கிழிந்தது

 

போச்சம்பள்ளி, செப்.11: போச்சம்பள்ளி அருகே காட்டுப்பன்றிக்கு வைத்த வெடியை கடித்த பசுமாட்டின் வாய் கிழிந்தது. வெடி வைத்த நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே ஓலப்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் விவசாயிகள் கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி சம்பத் என்பவர் 5 பசுமாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று காலை தனது மாந்தோட்டத்தில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். அப்போது, திடீரென பயங்கர வெடி சத்தம் கேட்டது. இதனால், அதிர்ச்சியடைந்த சம்பவத், அங்கு சென்று பார்த்தபோது, ஒரு பசுமாட்டின் வாய் கிழிந்து ரத்தம் வடிந்து கொண்டிருப்பதை கண்டு திடுக்கிட்டார்.

தொடர்ந்து, பசுமாட்டை மருத்துவமனைக்கு அழைத்து சென்று, கல்லாவி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதன்பேரில், போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரித்தனர். அப்போது, காட்டுப்பன்றிகளை வேட்டையாடுவதற்காக மர்ம நபர்கள் வெடி வைத்திருந்ததும், அதனை கடித்தபோது பயங்கர சத்தத்துடன் வெடித்து, மாட்டின் வாய் கிழிந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, பன்றிக்கு வெடி வைத்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post காட்டுப்பன்றிக்கு வைத்த வெடியை கடித்த பசுமாட்டின் வாய் கிழிந்தது appeared first on Dinakaran.

Related Stories: