முதல்வர் திறனாய்வு தேர்வில் 3 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்பு

 

கோவை, ஆக. 5: தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் பிளஸ்-1 மாணவ-மாணவிகளுக்கு ஆண்டுதோறும் முதலமைச்சரின் திறனறித்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வில் நடைமுறையில் உள்ள இடஒதுக்கீட்டின் அடிப்படையில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு உதவித்தொகையாக ரூ.10 ஆயிரம் (மாதம் ரூ.1000 வீதம்) ஒரு கல்வியாண்டிற்கு 10 மாதங்களுக்கு இளநிலை பட்டப்படிப்பு படிக்கும் வரை கல்வி உதவித்தொகை அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, நடப்பாண்டிற்கான முதலமைச்சரின் திறனறித்தேர்வு நேற்று மாநிலம் முழுவதும் நடைபெற்றது. தமிழக அரசின் 9,10 வகுப்பு கணிதம், அறிவியல், சமூகஅறிவியல் பாட புத்தகத்தில் உள்ள பாடத்திட்டங்களின் அடிப்படையில் இரண்டு தாள்கள் தேர்வு நடத்தப்பட்டது. முதல் தாளில் கணிதம் தொடர்பான கேள்விகள், இரண்டாம் தாளில் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் தொடர்பான கேள்விகள் இடம் பெற்றிருந்தன.

இதில், கோவை மாவட்டத்தில் கோவை, பொள்ளாச்சி, வால்பாறை உள்ளிட்ட 12 மையங்களில் தேர்வு நடந்தது. இத்தேர்வினை எழுத 3,541 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில், 3,090 பேர் தேர்வினை எழுதினர். 451 பேர் தேர்வு எழுதவில்லை. இந்த தேர்வானது ஓஎம்ஆர் விடைத்தாள் முறையில் காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரையும், மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்றது. தேர்வுக்கான ஏற்பாடுகளை பள்ளிக்கல்வித்துறை, அரசு தேர்வுகள் துறை சார்பில் செய்திருந்தனர்.

The post முதல்வர் திறனாய்வு தேர்வில் 3 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: