ஊட்டி, பிப்.18: தோட்டக்கலைத்துறை மூலம் வழங்கப்படும் வீரிய ரக காய்கறி விதைகளை பெற்று பயன் அடையுமாறு விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டது. விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஊட்டியில் உள்ள கூடுதல் கலெக்டர் அலுவலக அரங்கில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி தலைமை வகித்தார். தோட்டக்கலை இணை இயக்குநர் எஸ்.ஷிபிலாமேரி, ஆவின் பொதுமேலாளர் ஜெயராமன், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் வாஞ்சிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், ஊட்டி உழவர் சந்தை மேற்கூரை பராமரிப்பு மற்றும் அடிப்படை வசதிகளை செய்து தருமாறு அறிவுறுத்தப்பட்டது. தோட்டக்கலைத்துறை, சுகாதாரத்துறை மற்றும் வேளாண்மை சார்ந்த ஆராய்ச்சி நிலையங்களில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் பயிற்சிகள் குறித்து விவரங்களை முன்கூட்டியே வாட்ஸ் அப்பில் விவசாய குழுக்களுக்கும் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டது. கால்நடைத்துறை மற்றும் ஆவின் மூலமாக கால்நடை விவசாயிகளுக்கு தேவையான பசுந்தீவனம் மற்றும் உலர்தீவனம் ஆகியவற்றினைக் கொள்முதல் செய்து வழங்க அறிவுறுத்தப்பட்டது.
தோட்டக்கலைத்துறை மூலமாக கூடலூர் வட்டார நெல் விவசாயிகளுக்கு தேவையான தார் பாய்கள் கொள்முதல் செய்து வழங்க அறிவுறுத்தப்பட்டது. தற்போது அனைத்து வட்டாரங்களிலும் தோட்டக்கலைத்துறை மூலம் வீரிய ரக காய்கறி விதைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனை பெற்று பயனடை வேண்டும். மேலும் விவசாயம் தொடர்பான அனைத்து கோரிக்கைகளுக்கும் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி தெரிவித்தார்.
The post தோட்டக்கலைத்துறை மூலம் வீரிய ரக காய்கறி விதைகள் விநியோகம்: விவசாயிகள் பயன் பெற அழைப்பு appeared first on Dinakaran.