பிரதமர் மோடி சென்னை வருகை எதிரொலி : அடையாறு - விமான நிலையம் வழியில் போக்குவரத்து மாற்றம்

சென்னை : பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக வருகையை முன்னிட்டு சென்னையில் ஒரு சில இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.திருவிடந்தை ராணுவ கண்காட்சி மற்றும் அடையாறு புற்றுநோய் மைய வைர விழா கட்டட திறப்பு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி சென்னை வந்துள்ளார். மோடியின் வருகைக்கு பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் அவர் சென்னை வந்துள்ளார். மோடியை ஆளுநர், முதல்வர், துணை முதல்வர் வரவேற்றுள்ளனர்.இந்நிலையில் பிரதமரின் வருகை முன்னிட்டு ஒரு சில இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையம் முதல் அடையாறு வழியாக செல்லும் வாகனங்கள் சின்னமலை வழியாக நந்தனம் சந்திப்பிற்கு சென்று திருவிக பாலம் வழியாக அடையாறு செல்ல வேண்டும் என போக்குவரத்து காவல் துறை அறிவித்துள்ளது. மேலும் அடையாறில் இருந்து விமான நிலையம் நோக்கி செல்லும் வாகனங்கள் டைடல் பார்க் வழியாக எஸ்ஆர்பி டூல்ஸ் வலதுபுறம் திரும்பி வேளச்சேரி செல்ல அனுமதிக்கப்படுகிறது.

மேலும் மூப்பனார் பாலம் வழியாக காந்தி மண்டபம் செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது. ஆகவே அடையாறு செல்ல வேண்டிய வாகனங்கள் சேமியர்ஸ் வழியாகவும் , விமான நிலையம் செல்ல வேண்டிய வாகனங்கள் நந்தனம் வழியாகவும் செல்லவும் அனுமதிக்கப்படுகிறது என காவல்துறையினர் அறிவித்துள்ளனர். 

Related Stories: