பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை

சென்னை, ஜூலை 4: பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே கடல் சீற்றம் காரணமாக மீண்டும் பாலைவனம் போல் மணல் திட்டுகளாக சாலைகள் மாறியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். பொன்னேரி தொகுதி மீஞ்சூர் அடுத்த பழவேற்காடு காட்டுப்பள்ளி இடையே கடல் சீற்றம் காரணமாக மீண்டும் பாலைவனம் போல் இருபுறமும், மணல் தீட்டுகளாக மாறியதால் பொதுமக்களும் இருசக்கர வாகன ஓட்டிகளும் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். அதானி துறைமுகம் நடுக்கடலில் கருங்கற்களை கொட்டி சரக்கு கப்பல்கள் உள்ளே வருவதற்கான வழிவகை செய்துள்ளதால் கடல் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது.

பழவேற்காடு காட்டுப்பள்ளி இடையே கருங்காலி என்ற இடத்தில் கடலும் போக்குவரத்து சாலையும் அருகாமையில் உள்ளதால் கடல் சீற்றத்தில் கடல் அலைகள் உயரமாக எழும்பி மணல் திட்டுகளாக சாலையை முழுவதும் பாலைவனம் போல் காட்சியளிக்கிறது 3 மாதங்களுக்கு ஒரு முறை மணல் அள்ளும் பணியிலும் ஊராட்சி நிர்வாகமும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று அதிகமாக ஏற்பட்ட கடல் சீற்றம் காணப்பட்டதால் அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் மிகவும் அவதிக்கு உள்ளாகினர். அவ்வழியாக எண்ணூர் காமராஜர் துறைமுகம், வடசென்னை அனல் மின் நிலையங்கள், எல்அண்ட்டி மற்றும் அதானி துறைமுகங்களுக்கு செல்பவர்களும் பழவேற்காட்டில் இருந்து சென்னைக்கு செல்பவர்களும் செல்ல முடியாமல் அவதிக்கு உள்ளாகின்றனர்.

இப்பகுதியில் சாலைகளை இணைக்கும் விதத்தில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை தற்போது ஏற்பட்டுள்ள கடல் சீற்றத்தின் காரணமாக இருபுறமும் வாகனங்கள் செல்ல முடியாமல் காட்டுப்பள்ளி பகுதியில் இருந்து அத்திப்பட்டு, மீஞ்சூர், காட்டூர், வஞ்சிவாக்கம், திருப்பாலைவனம் வழியாக பழவேற்காட்டிற்கு சுமார் 40 கிலோமீட்டர் சுற்றி வரும் சூழல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக இரண்டு கிலோ மீட்டர் தொலைவிற்கு காட்டுபள்ளி முதல் காலாஞ்சி வரை பாலம் அமைத்து சாலையினை சீர் செய்து தர வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்

The post பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: