ஊட்டி அரசு பள்ளியில் மைதானம் சீரமைப்பு பணிகள் துவக்கம்

 

ஊட்டி, நவ. 5: ஊட்டியில் உள்ள அரசு பள்ளி மைதானம் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் மாணவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஊட்டி ஏடிசி பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சொந்தமான விளையாட்டு மைதானம் உள்ளது. இதனை மாணவர்கள், விளையாட்டு வீரர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த விளையாட்டு மைதானம் கொரோனா காலத்தின் போது ஊட்டி நகராட்சி மார்க்கெட் கடைக்காரர்கள் கடைகள் தற்காலிகமாக வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால், இந்த மைதானம் சேறும் சகதியுமாக மாறியது மட்டுமின்றி மேடு பள்ளம் பள்ளங்களாக மாறியது.

இந்த மைதானத்தை பள்ளி மாணவர்கள் பயன்படுத்த முடியாத நிலை இருந்து வந்தது. மேலும் மைதானம் முழுக்க பொருட்களை வளர்த்து மேடு பள்ளங்களாக மாறியதால் இதனை பள்ளி மாணவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த மைதானத்தை சீரமைத்து தர வேண்டுமென மாணவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதனை தொடர்ந்து ஊட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தற்போது இந்த மைதானத்தை சீரமைக்கும் பணிகள் மேற்கொண்டு வருகிறது.

முதல் கட்டமாக இந்த மைதானத்தில் உள்ள புற்களை அகற்றும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. டிராக்டர் மூலம் இந்த மைதானத்தில் இருந்த பொருட்கள் அனைத்தும் தற்போது அகற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து இந்த மைதானத்தை சமன் செய்து சீரமைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இந்த மைதானத்தைச் சுற்றிலும் தடுப்புச் சுவர்கள் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.

The post ஊட்டி அரசு பள்ளியில் மைதானம் சீரமைப்பு பணிகள் துவக்கம் appeared first on Dinakaran.

Related Stories: