இலங்கை சிறையில் தவித்த தமிழக மீனவர் 9 பேர் தமிழகம் திரும்பினர்

மீனம்பாக்கம்: இலங்கை சிறையில் தவித்த தமிழக மீனவர்கள் 9 பேர் இன்று திரும்பினர். ராமேஸ்வரம், நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் கடந்த 2021ம் ஆண்டு  டிசம்பர் மாதம் மீன்பிடிக்க சென்றனர். அப்போது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சுற்றிவளைத்து பிடித்து கைது செய்தனர்.  அடுத்தடுத்து ராமேஸ்வரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மாவட்டங்களை சேர்ந்த 54 மீனவர்களை கைது செய்து அவர்களின் படகுகள், வலைகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் தமிழக மீனவர்களை இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி  சிறையில் அடைத்தனர். இதையடுத்து மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து தமிழக அரசு, மத்திய வெளியுறவு துறை அமைச்சருக்கு கடிதம் எழுதி மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்த நிலையில், கடந்த ஜனவரி 2ம் வாரத்தில் தமிழக மீனவர்கள் 54 பேரையும் இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்தது. இதன்பிறகு அவர்கள் அனைவரும் இலங்கையில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளின் கட்டுப்பாட்டில்  ஒப்படைக்கப்பட்டனர். தமிழக மீனவா்களுக்கு கொரோனா உள்பட மருத்துவ பரிசோதனைகள் செய்து இந்தியாவுக்கு அனுப்ப இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் நடவடிக்கை எடுத்தது. இதனிடையே தமிழக  மீனவர்கள் பலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது பரிசோதனையில்  தெரியவந்தது. இதன்காரணமாக அவர்களை இந்தியாவுக்கு அனுப்பி வைக்க முடியவில்லை. கொரோனாவால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இலங்கையில்  சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இதனிடையே இலங்கையில் உள்ள மீனவர்களை விடுவிக்கவேண்டும் என்று மீனவர்களின் குடும்பத்தினர் ராமேஸ்வரத்தில் உள்ள மீன்வளத் துறை அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர். இந்த நிலையில், கொரோனா பாதிப்பு இல்லாத  ராமேஸ்வரம் மீனவர்கள் மரியஸ்மைல்சன், சங்கர், சக்திவேல், மலையன், எட்வர்ட், ஹென்றி, ஜெயகணேஷ், புதுக்கோட்டை மீனவர்கள் சந்தோஷ், பிரதீப், வீரபாண்டி ஆகிய 3 பேர் என 9 மீனவர்களை இலங்கை அரசு விடுவித்தது. இவர்கள் அனைவரும் இலங்கையில் இருந்து சென்னைக்கு வந்த வந்தே பாரத் மிஷின் ஏர்இந்தியா விமானத்தில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு வந்தனர். மீனவர்களுக்கு பாஸ்போர்ட் இல்லாததால், இந்திய தூதரகம் எமர்ஜென்சி சர்டிபிகேட் வழங்கி அனுப்பி வைத்தது. விமானநிலையத்தில் தமிழ்நாடு மீன்வளத்துறை  அதிகாரிகள், மீனவர்களை வரவேற்றனர். இதன்பிறகு ராமேஸ்வரத்தில் இருந்து வந்திருந்த மீன்வளத்துறை ஆய்வாளர் ரமேஷ்பாபு, 9 மீனவர்களையும் தனி வேனில் சொந்த ஊர்களுக்கு அழைத்து சென்றார். இலங்கையில் இந்திய தூதரக பராமரிப்பில் இருக்கும் மேலும் 45 மீனவர்களும் கொரோனா பாதிப்பு முழுமையாக நீங்கியபிறகு தமிழ்நாட்டுக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்….

The post இலங்கை சிறையில் தவித்த தமிழக மீனவர் 9 பேர் தமிழகம் திரும்பினர் appeared first on Dinakaran.

Related Stories: