திருச்சி, மே 18: திருச்சியில் இளம் பெண்ணை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருச்சி ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள அண்ணா விளையாட்டு மைதானம் அருகே வாலிபர் ஒருவர் பெண்ணுடன் பேசிக்கொண்டிருந்தனர். இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த வாலிபர் திடீரென அப்பெண்ணின் மீது கல்லால் தாக்கியுள்ளார். இதனால் அந்தபெண் மயங்கி விழுந்தார்.
இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வந்தது. இந்த வீடியோவின் அடிப்படையில் கே.கே.நகர் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் பெண்ணை தாக்கிய வாலிபர் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த வியாகுலநவீன்(22) என்பதும், திருச்சி தில்லைநகர் பகுதியில் வேலை பார்த்து வருவதும் தெரிய வந்தது. இதனையடுத்து கே.கே நகர் போலீசார் வழக்கு பதிந்து வியாகுலநவீனை நேற்று கைது செய்தனர்.
