திருச்சி, மே 16: திருச்சி மத்திய சிறையில் கைதிகள் கஞ்சா வைத்திப்பதாக தகவல் வந்தது. தகவலையடுத்து மே.13ம் தேதி சிறையில் சிறை அதிகாரி தலைமையில் போலீசார் சிறை வளாகத்திற்குள் சோதனை நடத்தினர். அப்போது 20ம் எண் அறையில் சோதனை செய்தபோது, அங்குள்ள கைதிகளான பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த நவீன்குமார் (25), சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பிரசன்னா (27), மதுரையைச் சேர்ந்த பாண்டீஸ்வரன் (19) ஆகியோரிடம் சோதனை மேற்கொண்டதில் 3 கைதிகளும் ஆசனவாயில் கஞ்சாவை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து சிறை அதிகாரி அளித்த புகாரின் பேரில் கேகே நகர் போலீசார் கைதிகளான நவீன் குமார், பிரசன்னா, பாண்டீஸ்வரன் மீது வழக்குபதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவர்களிடமிருந்த 37 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
