திருவள்ளூர், மே 14: திருவள்ளூர் அருகே குட்கா பதுக்கி விற்பனை செய்ய முயன்ற 3 பேரை, போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர் அடுத்து எறையாமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில், மப்பேடு போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு சந்தேகப்படும் படியாக நின்றிருந்த 3 பேரிடம், போலீசார் விசாரித்தபோது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார், அவர்களை பிடித்து சோதனை செய்ததில் அவர்களிடம் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்ததை கண்டுபிடித்தனர்.
பின்னர் அவர்களை கைது செய்து, போலீசார் நடத்திய விசாரணையில் திருவள்ளூர் அடுத்த எறையாமங்கலம் அம்மன் கோயில் தெருவை சேர்ந்த அரிகிருஷ்ணன் (42), எறையாமங்கலம் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்த பாலாஜி (43), செல்வம் (50) என்பதும், இவர்கள் 3 பேரும் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பதுக்கி விற்பனை செய்ய முயன்றதும் தெரியவந்தது. அவர்களிடமிருந்து 42.6 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
மேலும், கைதான 3 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்த போலீசார், அவர்களை திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
