புதுடெல்லி: சண்டிகர் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டு இருந்த இன்டிகோ விமானத்திற்குள் பவர்பேங்க் தீப்பிடித்து புகை மூட்டம் சூழ்ந்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக இன்டிகோ நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ‘‘ஹைதராபாத்தில் இருந்து சண்டிகருக்கு வந்த இன்டிகோ விமானம் தரையிறங்கிய சிறிது நேரத்திலேயே விமானத்திற்குள் மேலே உள்ள உடைமைகள் வைக்கும் பெட்டி ஒன்றில் இருந்து புகை வெளியேறியது.
இதனையடுத்து பாதுகாப்பு நலன் கருதி உடனடியாக பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. பயணியின் பவர் பேங்க் தீப்பிடித்ததே புகை வெளியேறக்காரணமாகும். இதில் பயணிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக விமான நிலைய முனையத்திற்குள் அழைத்துச்செல்லப்பட்டனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
