பாஜவின் வெற்றித் தேரை பஞ்சாப் தடுத்து நிறுத்தும்: கெஜ்ரிவால் உறுதி

புதுடெல்லி: மேற்கு வங்கத்தில் வெற்றி பெற்ற பாஜவின் வெற்றித் தேரை பஞ்சாப் மாநிலம் தடுத்து நிறுத்தும் என்று ஆம் ஆத்மியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். பஞ்சாபில் கபூர்தலா இல்லத்தில் ஆம் ஆத்மி எம்எல்ஏக்களிடையே உரையாற்றிய ஆம் ஆத்மியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் கூறுகையில், \” ஜனநாயகம் பாஜவால் கையகப்படுத்தப்பட்டு அழிக்கப்பட்டுவிட்டது.

தேர்தல்களில் பாஜ முறைகேடு செய்கின்றது. மேற்கு வங்கத்தில் அவர்கள் செய்த அதே காரியத்தைத்தான் டெல்லியில் உள்ள எனது சட்டமன்ற தொகுதியிலும் வாக்காளர் பட்டியலில் இருந்து வாக்குகளை நீக்கியதன் மூலம் செய்தார்கள். இன்று ஜனநாயகம் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது. 2014ம் ஆண்டில் நரேந்திர மோடிக்கு ஆதரவாக ஒரு அலை வீசியது.

அதன் மூலம் அவர்கள் தொடர்ந்து தேர்தல்களில் வெற்றி பெற்று வந்தனர். 2015ம் ஆண்டு டெல்லியில் அவர்களால் மூன்று இடங்களை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. பஞ்சாபில் பாஜவினர் ஆட்சிக்கு வந்தால் மாநிலத்தையே சீரழித்துவிடுவார்கள். வரவிருக்கும் பஞ்சாப் சட்டமன்ற தேர்தல் பிரதமர் மோடிக்கு கடைசி தேர்தலாக அமையும். பஞ்சாப் தேர்தலுக்கு பின் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு கவிழ்ந்துவிடும்” என்றார்.

Related Stories: