பெரும்புதூர், ஏப்.22: பெரும்புதூர் ராமானுஜர் கோயிலில் கோலகலமாக நடைபெற்ற சித்திரை தேர் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, தேரினை வடம் பிடித்து இழுத்து தரிசனம் செய்தனர். பெரும்புதூரில் பிரசித்தி பெற்ற ஆதிகேசவ பெருமாள் மற்றும் ராமானுஜர் கோயில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் ஆண்டுதோறும் ராமானுஜருக்கு 10 நாட்களும், ஆதிகேசவ பெருமாளுக்கு 10 நாட்களும் சித்திரை பிரமோற்சவம் விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, கடந்த 13ம் தேதி ராமானுஜரின் 1009வது அவதார உற்சவம் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து கேடயம், குதிரை வாகனம், தங்க பல்லுக்கு, புஷ்ப பல்லக்கு உள்ளிட்ட வாகனங்களில் ராமானுஜர் எழுந்தருளி, திரு வீதிகளில் உலா வந்து அருள் பாலித்தார்.
விழாவின், 7வது நாளான நேற்று தேர் திருவிழா நடைபெற்றது. இதில், உற்சவமூர்த்தி ராமானுஜருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் எழுந்தருளினார். விழாவில் பெரும்புதூர் நகராட்சி தலைவர் சாந்தி சதிஷ்குமார், அறநிலையத் துறை அதிகாரிகள் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு, தேரினை வடம் பிடித்து இழுத்து வழிபாடு செய்தனர். முன்னதாக ராமானுஜருக்கு பால், இளநீர், தயிர் அபிஷேகம் நடைபெற்றது. திருவீதிகளில் வழிநெடுகிலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி பெரும்புதூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
