வேளச்சேரி, ஏப். 20: சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலம், 178வது வார்டுக்கு உட்பட்ட வேளச்சேரி, சேஷாத்ரிபுரம் மெயின் சாலை உள்ளது. இந்த சாலை 40 அடி அகலம், 300 மீட்டர் நீளம் உடையது. இந்த சாலையை ஒட்டி உள்ள 3 ஏக்கர் நிலத்தில் பிரபல தனியார் கட்டுமான நிறுவனம் அடுக்குமாடி கட்டிடம் கட்டி வருகிறது. இந்த அடுக்கு மாடி கட்டிடம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கப்பட்டது. அப்போது 60 அடி ஆழத்தில் பேஸ்மென்ட் போட, ராட்சத இயந்திரம் கொண்டு பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது, சேஷாத்ரிபுரம் பிரதான சாலை விரிசல் அடைந்து சாலை உள்வாங்கியது. இதையடுத்து சென்னை ஐ.ஐ.டி., வல்லுனர் குழுவினர் கட்டுமான பணியை ஆய்வு செய்தபின், சாலை சீரமைக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று மீண்டும் அதே சாலை விரிசல் ஏற்பட்டது. அதனால் சாலை உள்வாங்கும் அபாயத்தில் உள்ளது. இதையடுத்து அசம்பாவிதம் ஏற்படுவதை தடுக்க அந்த சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இந்த சாலை இரண்டாவது முறையாக விரிசல் ஏற்பட்டுள்ளதால் இதே சாலையில் உள்ள இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகளில் வசித்து வரும் 400 குடும்பங்கள் மற்றும் சுற்றி உள்ள குடியிருப்புவாசிகள் அச்சமடைந்துள்ளனர்.
