தொண்டாமுத்தூர் ஏப்.19: தொண்டாமுத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளர் என்.ஆர் கார்த்திகேயன் 100 சதவீதம் வெற்றி பெறுவது நிச்சயம் என பிரசாரத்தில் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் அ. ரவி தெரிவித்தார். தொண்டாமுத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் என்.ஆர்.கார்த்திகேயனை ஆதரித்து கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர் அ.ரவி ஆலாந்துறை பகுதியில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அப்போது மாவட்ட திமுக செயலாளர் அ.ரவி பேசுகையில், ‘‘வேட்பாளர் என்.ஆர் கார்த்திகேயன் நரசிபுரம் ஊராட்சி தலைவராக இருந்தபோது, அவரது மக்கள் பணியை பாராட்டி தமிழ்நாடு அரசு உத்தமர் காந்தி விருதை முதல்வர் மு.க ஸ்டாலினிடம் பெற்றுள்ளார்.
மக்களுடன் நெருங்கி பழகி, பிரச்னைகளை உடனுக்குடன் தீர்த்து வைத்துள்ளார். கலைஞர் ஆட்சியில் விவசாயிகள் கடன் தள்ளுபடியை முழுமையாக பெற்றுத் தந்தவர். கடந்த 5 வருடமாக நடைபெற்ற முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சியில் ஒவ்வொரு நலத்திட்டமும் இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு முதல் மாநிலமாக முன்னுதாரணமாக திகழ்கிறது. மகளிர் உரிமைத் தொகை, மகளிருக்கு இலவச பேருந்து வசதி, மாணவர்களுக்கு காலை உணவு திட்டம், என ஏராளமான திட்டங்களை நிறைவேற்றி உள்ளார்.
மு.க ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்க என்.ஆர். கார்த்திகேயனுக்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும். தொண்டாமுத்தூர் தொகுதியில் 100 சதவீதம் திமுக வெற்றி பெறும் என குறிப்பிட்டார். இந்த பிரசாரத்தில் ஆலாந்துறை திமுக நகர செயலாளர் ராமமூர்த்தி, பேரூராட்சி தலைவர் மணிமேகலை ராமமூர்த்தி, துணைத்தலைவர் மூர்த்தி, காங்கிரஸ் வட்டார தலைவர் நாகராஜ், வெங்கடாசலம், கிருஷ்ணமூர்த்தி, பேரூராட்சி கவுன்சிலர்கள், வார்டு செயலாளர்கள், பாக முகவர்கள், பெண்கள் மற்றும் பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
