தஞ்சாவூர்: மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என வலியுறுத்தி பாமக தலைவர் அன்புமணி விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக நேற்று தஞ்சாவூர் வந்தார். அப்போது அவர் பேசியதவாது: தமிழகத்தில் இன்று குதிரை பேரம், கழுதை பேரம், ஒட்டக பேரம், யானை பேரம் போன்றவை நடைபெற்று வருகிறது. மேகதாது அணை குறித்து யாரும் கவலைப்படவில்லை. தடுப்பணை கட்டினால் தமிழகத்தில் குடிநீர் பஞ்சம் ஏற்படும், வறட்சி ஏற்படும், தமிழகம் அழிந்தால் தமிழகத்தில் கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் இனம் அழிந்து போகும். மேகதாது அணை கட்டக்கூடாது என சமூக வலைதளங்கள் மூலம் ராகுல்காந்திக்கு பொதுமக்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக திருச்சி கல்லணையில் அன்புமணி அளித்த பேட்டி: டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவித்து நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் வைக்கும் கோரிக்கை சரியானதுதான். அதை அரசு செயல்படுத்த வேண்டும். தமிழ்நாடு அரசு, மேகதாது அணை கட்டுவதை தீவிரமாக தடுக்க வேண்டும். ஆனால் மற்ற கட்சி எம்எல்ஏக்களை ரூ.30 கோடி, ரூ.50 கோடி கொடுத்து எப்படி தங்களது கட்சிக்கு ஆள் பிடிக்கலாம் என தவெக அரசியல் செய்து வருகிறது. இந்த போன்ற பிரச்சனைகளில் இளைஞர்கள் வீதியில் இறங்கி போராட வேண்டும். இவ்வாறு கூறினார்.
