சிபிஎஸ்இ பள்ளிகளில் மும்மொழி கொள்கையை கைவிட வேண்டும்: மாணிக்கம் தாகூர் வலியுறுத்தல்

சென்னை: மும்மொழி கொள்கை என்பது மாணவர்கள் மீதான கொடூர தாக்குதல் என்றும், சிபிஎஸ்இ பள்ளிகளில் மும்மொழி கொள்கை கட்டாயம் என்ற அறிவிப்பை மோடி அரசு கைவிட வேண்டும் என்றும் மாணிக்கம் தாகூர் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சிபிஎஸ்இ பள்ளிகளில் 6ம் வகுப்பில் இருந்து மும்மொழி கொள்கை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மாணவர்கள், பெற்றோர்கள் மீதான இந்த துல்லிய, கொடூர தாக்குல் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்களது குறுகிய அரசியல் காரணங்களுக்காக, இந்தி, சமஸ்கிருதத்தை இந்தியாவின் மொழியாக்க வேண்டும் என்பதற்காக மாணவர்களின் எதிர்காலத்தை பாழ்படுத்தும் ஆபத்தான விளையாட்டை மோடி அரசு தொடங்கியிருக்கிறது.

எனவே, சிபிஎஸ்இ பள்ளிகளில் மும்மொழி கட்டாயம் என்ற அறிவிப்பை மோடி அரசு திரும்ப பெற வேண்டும். பள்ளி கல்வியை 100 சதவீதம் மாநில அரசுகளிடம் விட்டுவிட வேண்டும். இதையும் மீறி இந்தி, சமஸ்கிருதத்தை திணித்தே தீருவோம் என்றால் அதற்கான விலையை மோடி அரசு கொடுக்க வேண்டியிருக்கும் என எச்சரிக்க விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மாணிக்கம் தாகூர் விடுத்த மற்றொரு அறிக்கையில், ‘‘அமைச்சர் விஸ்வநாதன் மீது ஆளுநரிடம் தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் புகார் அளித்திருப்பது, ஆர்எஸ்எஸ்சின் வெறுப்பரசியலை வெளிச்சம் போட்டு காட்டுகிறது’’ என கூறியுள்ளார்.

Related Stories: