கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபத்திற்காக மக்களை மோடி அரசு சுரண்டுகிறது: ஜவாஹிருல்லா கடும் கண்டனம்

சென்னை: மனிதநேய மக்கள் கட்சின் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா எம்எல்ஏ நேற்று வெளியிட்ட அறிக்கை:
பெட்ரோல், டீசல் விலையை தற்போது குறைப்பது சாத்தியமில்லை என ஒன்றிய பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறியுள்ளார். இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு என்பது மோடி அரசின் பெருநிறுவனங்கள் ஆதரவு அரசியலின் வெளிப்படையான சாட்சியாக மாறியுள்ளது. நாட்டின் சாதாரண மக்களின் பணத்தை சுரண்டி, சில பெருநிறுவனங்களையும் முதலீட்டு கார்ப்பரேட் சக்திகளையும் செழிக்கச் செய்வதே தற்போதைய ஒன்றியத்தை ஆளும் மோடி அரசின் உண்மையான பொருளாதார கொள்கை என்பதை பெட்ரோலிய நிறுவனங்களின் லாப கணக்குகள் தெளிவாக நிரூபிக்கின்றன.

இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் கடந்த சில ஆண்டுகளில் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளன. ஒருபுறம் மக்கள் அத்தியாவசிய செலவுகளை கூட சமாளிக்க முடியாமல் தவிக்கின்றனர்; மறுபுறம், பெட்ரோலிய நிறுவனங்களும் மோடி அரசும் மக்களின் துயரத்தை பணமாக மாற்றி பணப்பெருங்கடலில் மிதக்கின்றன.

இந்தியாவில் இன்று எரிபொருள் விலை என்பது அரசின் வரிவசூல் கருவியாக மாற்றப்பட்டுள்ளது. தேர்தல் காலங்களில் “சாதாரண மக்களின் அரசு” என்று பேசும் பிரதமர் மோடி, நடைமுறையில் பெருநிறுவனங்களின் நலன்களை காக்கும் முகவராகவே செயல்படுகின்றனர். எனவே, ஒன்றிய அரசு உடனடியாக பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி மற்றும் செஸ் வரிகளை குறைத்து, எரிபொருள் விலையை கணிசமாக குறைக்க வேண்டும். இல்லையெனில், மக்களை சுரண்டும் இந்த கார்ப்பரேட் ஆதரவு பொருளாதார கொள்ளைக்கு எதிராக மக்கள் ஜனநாயக ரீதியில் தங்களது கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தும் நாள் வெகுதூரத்தில் இல்லை.

Related Stories: