எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததற்கான விடை தெரியாமல் இடைத்தேர்தல் நடத்தக்கூடாது: கிருஷ்ணசாமி பேட்டி

சென்னை: சென்னையில், புதிய தமிழகம் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தலைமையில் உயர்மட்டக் குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகான சூழல் பற்றி விவாதித்தனர். 16 தீர்மானங்களை நிறைவேற்றப்பட்டுள்ளது.

தொடர்ந்து நிருபர்களிடம் கிருஷ்ணசாமி கூறியதாவது:
விஜய் தலைமையிலான அரசு, மக்கள் எந்த எதிர்பார்ப்போடு வாக்களித்தார்களோ அந்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் செயல்படவில்லை. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவில் பிற கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களை ஆசைவார்த்தை காட்டியோ, அச்சுறுத்தியோ ஆளுங்கட்சியை நோக்கி இழுக்கிறார்கள். கடந்த காலங்களில் ஏதாவது சட்டமன்ற உறுப்பினர் இயற்கை எய்தினால் இடைத்தேர்தல் நடப்பது வழக்கம். ஆனால், இப்போது அது ஒரு இயக்கம் போல முன்னெடுக்கப்படுகிறது.

அரசியல் ஆதாயத்திற்காக மக்கள் பிரதிநிதிகள் இவ்வாறு செய்வது குற்றம்; அதை தடை செய்ய வேண்டும். அவர்கள் என்ன காரணத்திற்காக பதவியை ராஜினாமா செய்தார்கள் என்ற கேள்விக்கு விடை கிடைக்காத வரை, ஏற்கனவே ராஜினாமா செய்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தக்கூடாது. இதை வலியுறுத்தி டெல்லி சென்று தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கவுள்ளோம். அதேபோல், ஆளுநரையும் சந்தித்து இது தொடர்பாக புகார் அளிக்கவுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: