சென்னை: எஸ்டிபிஐ கட்சி மாநில அமைப்புப் பொதுச்செயலாளர் நஸ்ரூதீன் வெளியிட்ட அறிக்கை:
மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஆளுநர் அர்லேகர், அதை தாண்டி வைகை ஆற்றை ஆய்வு செய்ததும், சட்டம்-ஒழுங்கு, வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் ஒன்றிய அரசின் திட்டங்கள் குறித்து விசாரணை நடத்தியிருப்பதும் ஏற்புடையதல்ல.
மாநிலத்தில் வளர்ச்சிப் பணிகள், காவல்துறை ஆய்வுகள் குறித்து ஆலோசிக்கவும், முடிவெடுக்கவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட துறை சார்ந்த அமைச்சர்களும், முதல்வரும் இருக்கிறார்கள். ஆளுநர் நேரடியாக அதிகாரிகளை அழைத்து ஆய்வு நடத்துவது என்பது மக்களாட்சி மாண்புகளைக் கேலிக்குரியதாக்கும் செயலாகும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஆளுநருக்கு இத்தகைய நேரடி ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள எந்த அதிகாரமும் இல்லை.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசுக்கு இணையாக, இணையாட்சி நடத்த முயல்வதும், மாநில நிர்வாகத்தின் அன்றாடச் செயல்பாடுகளில் மூக்கை நுழைப்பதும் நாட்டின் அரசியலமைப்புச் சட்ட வரையறைகளை அப்பட்டமாக மீறும் செயலாகும். தமிழகத்தில் தொடர்ந்து ஆளுநர்கள் தங்களின் அதிகார வரம்பை மீறி, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை முடக்கும் நோக்கில் செயல்படுவது வாடிக்கையாகிவிட்டது. ஆளுநரின் அத்துமீறிய நடவடிக்கையை எஸ்டிபிஐ கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
