தென்மேற்கு பருவ மழையால் பாதிக்கப்படும் பகுதிகளில் மீட்பு பணிக்கு 11 துறைகளின் அதிகாரிகள் அடங்கிய 21 மண்டலகுழுக்கள் அமைப்பு: காஞ்சிபுரம் கலெக்டர் தகவல்

காஞ்சிபுரம்: தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் எடுக்கப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து, அனைத்துத்துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நேற்று காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் நடந்தது. கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமை வகித்தார். அப்போது, அவர் பேசியதாவது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டுகளில் பெய்த பெருமழையின்போது பாதிக்கப்பட்ட பகுதிகள் 3 ஆக பிரிக்கப்பட்டுள்ளன. இதில், மிக அதிகம் பாதிக்கப்படும் பகுதிகள் 21, அதிகம் பாதிக்கப்படும் பகுதிகள் 26, நடுத்தர மற்றும் குறைவாக பாதிக்கப்படும் பகுதிகள் 22 என மொத்தம் 72 பாதிக்கப்பட்ட பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையின்போது பாதிக்கப்படும் பகுதிகளில் மீட்புபணிகள் மேற்கொள்ளும் பொருட்டு 11 துறையை சார்ந்த அலுவலர்களை கொண்ட 21 மண்டலக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த குழுக்களின் பணிகளை கண்காணிக்க 21 துணை கலெக்டர், நிலையிலான குழுத் தலைவர்கள் மற்றும் துணை குழுத் தலைவர்கள் மற்றும் தொழில்நுட்ப அலுவலர்கள் நியமிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர். மேலும் துறை வாரியாக மேற்கொள்ளப்படும் முன்னேற்பாடு பணிகள் குறித்து விரிவாக சம்பந்தப்பட்ட 11 துறை சார்ந்த அலுவலர்களிடம் விவாதிக்கப்பட்டு மேற்கொள்ளவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் இடர்கள் ஏற்படின் மேற்கொள்ள வேண்டிய மீட்பு நடவடிக்கைகள் விரைவில் முடிக்க வேண்டும்.

மொபைல் நிறுவனங்களின் உயர்கோபுரங்கள், தகவல் தொழில்நுட்பங்கள் ஆகியவை செயல்படும் நிலையில் உள்ளதா என்பதை சார்நிலை அலுவலர்கள் உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும். வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களை தங்க வைக்க நிவாரண முகாம்கள் கண்டறியப்பட்டு, முகாம்களில் தேவைப்படும் அடிப்படை வசதிகளான குடிநீர், மின்சார வசதிகள், வேட்டி மற்றும் சேலைகள், பாய், தலையணை, பெட்ஷீட், மளிகை பொருட்கள் இருப்பு, உணவு சமைப்பதற்கான இடம், சமையலர், சிலிண்டர் மற்றும் எரிவாயு பொருட்கள், மெழுகுவர்த்தி, டார்ச் லைட், ஜெனரேட்டர்கள் மற்றும் கழிப்பறை வசதிகள் உள்பட அனைத்து அடிப்படை வசதிகளையும் அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.

நெடுஞ்சாலைத்துறை, மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து மழைநீர் வடிகால்கள், பாலங்கள் ஆகியவற்றை தூர்வாரும் பணியை பருவமழைக்கு முன்னதாகவே முடிக்க வேண்டும். வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகளில் உள்ள பாலங்கள் மற்றும் சிறு பாலங்கள் சுத்தம் செய்யும் பணி, மழைநீர் வடிகால்கள் அமைத்தல், விரிவு படுத்துதல், உபரிநீர் கால்வாய்கள், நீர்வரத்து கால்வாய்கள் ஆகியவற்றை தூர்வாருதல் போன்ற பணிகளில் பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நெடுஞ்சாலைத்துறை, பேரூராட்சித்துறை, நகராட்சி நிர்வாக துறை அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும்.

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஞ்சிபுரம் மாவட்டத்தில், பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி நிர்வாகம், பேரூராட்சிகள் துறை மற்றும் பல்வேறு துறைகளின் மூலமாக மழை வெள்ள பாதிப்புகளை தடுக்க போதிய உபகரணங்கள் மற்றும் உயிர்காக்கும் கருவிகளை இருப்பு வைக்க வேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு மற்றும் மீட்புப் பணிக்கு தேவைப்படும் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களான ஜெனரேட்டர், மரம் அறுக்கும் இயந்திரம், மணல் மூட்டைகள், சவுக்கு கம்புகள், மின் கம்பங்கள், ஆம்புலன்ஸ், பொக்லைன் இயந்திரம், ரப்பர் படகுகள் மற்றும் மிதவைப் படகுகள் மற்றும் டார்ச் லைட் ஆகியவற்றை போதுமான அளவில் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்துத் துறை அலுவலர்கள், தன்னார்வலர்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் அறிவுறுத்தினார். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் செல்வகுமார், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

* பள்ளி, கல்லூரிகளில் பாதுகாப்பு வசதி ஆய்வு
அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் பாதுகாப்பு வசதிகளை முன்கூட்டியே ஆய்வு செய்து உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அவசர தேவைக்கான மருந்துகள், உயிர்காக்கும் மருந்துகள் உள்ளிட்டவைகளும், கால்நடைகளுக்கு தேவையான மருந்துகள் உள்ளிட்ட பொருட்களையும், பெட்ரோல் டீசல் உள்ளிட்ட எரிபொருட்களையும் முன்கூட்டியே கொள்முதல் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.

* முன்கூட்டியே தங்கவைக்க நிவாரண முகாம்கள்
பருவ மழையால் மிக அதிகமாக பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் வசிக்கும் மூத்த குடிமக்கள், கருவுற்ற தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் விவரங்களை முன்கூட்டியே பட்டியலிட்டு, மழை பொழிவின்போது அவர்களை முன்கூட்டியே நிவாரண முகாம்களுக்கு அழைத்து வந்து தங்க வைக்க தயார் நிலையில் இருக்க வேண்டும்.

The post தென்மேற்கு பருவ மழையால் பாதிக்கப்படும் பகுதிகளில் மீட்பு பணிக்கு 11 துறைகளின் அதிகாரிகள் அடங்கிய 21 மண்டலகுழுக்கள் அமைப்பு: காஞ்சிபுரம் கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: