விழுப்புரம் சிறையில் கைதி திடீர் சாவு

விழுப்புரம்: விழுப்புரம் கிளை சிறையில் விசாரணை கைதி உயிரிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விழுப்புரம் ஜிஆர்பி தெருவை சேர்ந்த அப்பு (எ) அற்புதராஜ் (33) என்பவர் அடிதடி வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்துள்ளார். இதனால் நீதிமன்றம், பிடிவாரன்ட் பிறப்பித்தது. அதன்படி தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் அதிகாலை அற்புதராஜை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விழுப்புரம் கிளை சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் நேற்று காலை சிறை கண்காணிப்பாளர் நயினார் அவரை எழுப்ப சென்ற போது நீண்ட நேரமாக அப்பு (எ) அற்புதராஜ் எழுந்திருக்கவில்லை. உடல் முழுவதும் வியர்த்த நிலையில் பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்ததால் உடனடியாக அவர் விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரது உடலை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். சிறை கண்காணிப்பாளர் நயினார் அளித்த புகார் பேரில் நகர காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உயிரிழந்த அற்புதராஜிக்கு ஏற்கனவே உடல்நிலை சரியில்லை என்றும் அதனால் தான் உயிரிழந்திருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றபோது தாக்கியதால்தான் அற்புதராஜ் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். உரிய நீதி கிடைக்காமல் அவரது சடலத்தை வாங்க மாட்டோம் என்று உறவினர்கள் தெரிவித்து உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

The post விழுப்புரம் சிறையில் கைதி திடீர் சாவு appeared first on Dinakaran.

Related Stories: