வாரணாசி ஐ.ஐ.டி. வளாகத்தில் மாணவி கூட்டு பலாத்காரம் பா.ஜ.வினர் 3 பேர் கைது

லக்னோ: வாரணாசி பனாரஸ் இந்து பல்கலைக்கழக ஐஐடி மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் பாஜ.வின் ஐடி பிரிவை சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் பனாரஸ் இந்து பல்கலைக்கழக ஐஐடி வளாகத்தில் கடந்த நவம்பர் 1ம் தேதி கையில் துப்பாக்கியுடன் பைக்கில் வந்த 3 மர்ம நபர்கள், நண்பருடன் சென்று கொண்டிருந்த மாணவியை கடத்தி சென்று கூட்டு பலாத்காரம் செய்தனர். அவரது மொபைல் போனையும் பறித்து கொண்டனர்.

இச்சம்பவம் குறித்து வழக்கு பதிய கோரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து, அங்குள்ள 170-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து 2 மாதங்களுக்கு பிறகு போலீசார் வழக்கு பதிந்து சந்தேகத்தின் பேரில் 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர்களில் இருவரை கைது செய்தனர். இதில் குணால் பாண்டே, சாக்ஷம் படேல் ஆகிய இருவரும் பாஜ.வின் வாரணாசி ஐடி பிரிவை சேர்ந்தவர்களாவர். இவர்களது பேஸ்புக் பக்கத்தை சமூக வலைதள பயன்பாட்டாளர்கள் பகிர்ந்து வருகின்றனர். இதில் பிரதமர் மோடி, முதல்வர் யோகி ஆதித்யநாத், பாஜ தேசிய தலைவர் ஜேபி. நட்டாவுடன் உள்ள படங்கள் இடம் பெற்றுள்ளன.

இதுதான் பாஜ.வின் கொடூர முகம்
இது குறித்து உ.பி. மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் தனது எக்ஸ் பதிவில், ‘’பனாரஸ் இந்து பல்கலை.யின் ஐஐடி மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் வேறு யாருமல்ல பாஜ.வின் வாரணாசி ஐடி பிரிவின் ஒருங்கிணைப்பாளரும், துணை ஒருங்கிணைப்பாளரும் தான். இதுதான் பாஜ.வின் கொடூர முகம், வெட்கக்கேடு,’’ என்று கூறியுள்ளார்.

The post வாரணாசி ஐ.ஐ.டி. வளாகத்தில் மாணவி கூட்டு பலாத்காரம் பா.ஜ.வினர் 3 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: