பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி 4 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டு சென்றார்!

சென்னை: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி 4 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டு சென்றார். அவர் டெல்லியில் 4 நாட்கள் தங்கியிருந்து தமிழ்நாடு அரசியல் விவகாரங்கள் குறித்து மேலிடத்திற்கு தகவல் தெரிவிக்கவுள்ளார். குறிப்பாக அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜி குறித்து அவர் விவாதிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என தமிழ்நாடு அரசு பரிந்துரை செய்த நிலையில், அதனை ஆளுநர் ஏற்க மறுத்துவிட்டார்.

ஆனால், தமிழ்நாடு அரசு செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என அரசாணை வெளியிட்டது. இந்த விவகாரம் தொடர்பாக டெல்லியில் ஆளுநர் ஆர்.என்.ரவி சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்துவார் என கூறப்படுகிறது. தமிழ்நாடு அரசுடன் மோதல் போக்கு அதிகரித்துள்ள நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது.

டெல்லி செல்லும் அவர் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் ஒன்றிய அமைச்சர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி பயணத்தை முடித்து தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஜூன்-27ம் தேதி சென்னை திரும்புவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

The post பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி 4 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டு சென்றார்! appeared first on Dinakaran.

Related Stories: