போலீசார், தொழிலதிபர் என 20 பேரை ஏமாற்றி திருமணம்: கல்யாண ராணி சிக்கினார்

தாராபுரம்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தைச் சேர்ந்த 35 வயது வாலிபர் ஒருவர் தாராபுரம் உடுமலை சாலையில் பேக்கரி மற்றும் கால்நடை தீவனம் விற்பனை நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு திருமணம் செய்து வைக்க உறவினர்கள் பெண் தேடி வந்தனர். கடந்த ஆறு மாதங்களுக்கு முன் ‘அம்பி டேட் தி தமிழ் வே’ என்ற இன்டர்நெட் செயலி மூலம் ஈரோட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் தாராபுரம் வாலிபருக்கு அறிமுகமானார்.

இவர்கள் இருவரும் தினமும் நீண்ட நேரம் செல்போனில் உரையாடி வந்தனர். இதையடுத்து இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்து கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். மணப்பெண்ணுடன் மாலையும் கழுத்துமாக தனது வீடு திரும்பிய வாலிபரை பார்த்ததும் அவரது பெற்றோர்கள் முதலில் அதிர்ச்சி அடைந்து பின்பு எப்படியோ நல்ல பெண்ணாக திருமணம் செய்து கொண்டாரே என மகிழ்ச்சி அடைந்து அந்த மணப்பெண்ணுக்கு தேவையான நகைகள் தங்க தாலிக்கொடி, புதிய புடவைகள் அனைத்தும் அவர்களது குடும்பத்தினரே வாங்கி கொடுத்துள்ளனர்.

அந்த வாலிபருடன் மூன்று மாதம் குடும்பம் நடத்திய அந்த பெண் அவள் கூறிய வயதுக்கும் பெண்ணின் தோற்றத்திற்கும் பொருத்தம் இல்லாமல் இருந்ததால் அவரது ஆதார் அட்டையை சந்தேகத்தின் பேரில் வாலிபரின் குடும்பத்தினர் பார்த்தபோது அதில் அவரது கணவரின் பெயர் சென்னையைச் சேர்ந்த வேறு ஒருவரின் பெயர் இருந்ததும், வயதிலும் வித்தியாசம் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அதிர்ச்சி அடைந்த வாலிபரின் குடும்பத்தினர், அந்த பெண்ணை தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் அந்த பெண்ணுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே சென்னையைச் சேர்ந்த ஒரு நபருடன் திருமணம் முடிந்ததும் அவருக்கு ஒரு குழந்தை இருப்பதும் தெரிய வந்தது. தொடர்ந்து கரூரில் ஒரு காவல் ஆய்வாளருடனும், மதுரையில் மற்றொரு போலீசாருடனும், கரூரில் ஒரு நிதி நிறுவன அதிபருடனும் என சுமார் 20க்கும் மேற்பட்டோருடன் திருமணம் நடந்தது தெரியவந்தது.
திருமணம் நடந்த சில மாதங்களிலேயே கணவருடன் தகராறு செய்து கொண்டு நகை பணத்துடன் தலைமறைவாகி விடுவதும், 35 வயதுக்கும் மேற்பட்ட திருமணமாகாத ஆண்களையும், திருமணம் ஆன ஆண்களையும் குறிவைத்து அந்த பெண் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அந்த பெண்ணிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

The post போலீசார், தொழிலதிபர் என 20 பேரை ஏமாற்றி திருமணம்: கல்யாண ராணி சிக்கினார் appeared first on Dinakaran.

Related Stories: