கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்கள் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் எப்படி தர முடியும்? அரசு விளக்கம் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து இதுவரை 65 பேர் பலியாகியுள்ளனர். பலியானவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசின் இந்த முடிவை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த முகமது கோஸ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், விஷச்சாராயம் குடித்து பலியானவர்களுக்கு எந்த அடிப்படையில் அதிக இழப்பீடு வழங்கப்படுகிறது என்பதை அரசு தெளிவுபடுத்தவில்லை. விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் சுதந்திர போராட்ட தியாகிகளோ, சமூக சேவகர்களோ, சமூகத்துக்காக உயிர் தியாகம் செய்தவர்களோ அல்ல என்பதால், அவர்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும் அரசு உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபிக் அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், விஷச்சாராயம் குடித்து மரணமடைந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு என்பது அதிகம். இவ்வளவு அதிக தொகையை எப்படி வழங்க முடியும். இந்த தொகையை மறுபரிசீலனை செய்வது குறித்து அரசின் கருத்தை அறிந்து தெரிவிக்க வேண்டும் என்று அரசு தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

The post கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்கள் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் எப்படி தர முடியும்? அரசு விளக்கம் தர ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: