ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேரை விடுதலை செய்தது இலங்கை நீதிமன்றம்: 2 விசைப்படகுகளை நாட்டுடைமை ஆக்கவும் உத்தரவு..!!

கொழும்பு: ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த மாதம் 22ம் தேதி மீன்பிடிப்பதற்கான அனுமதி சீட்டை பெற்று சுமார் 400க்கும் மேற்பட்ட நிலையில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இவர்கள் கச்சத்தீவு, நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை வீரர்கள், மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் தடுத்து நிறுத்தி விரட்டியடித்தனர். இதை தொடர்ந்து 2 விசைப்படகுகளையும், அதில் இருந்த 6 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறைபடித்தனர்.

சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்குப்பதிவு செய்து ஊர்காவல்த்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ஆஜர்படுத்தப்பட்ட மீனவர்களை இலங்கை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், நீதிமன்ற காவல் முடிந்து மீனவர்கள் 6 பேரையும், இன்று ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது மீனவர்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி, மீனவர்கள் 6 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.

மேலும் சிறைபிடிக்கப்பட்ட 2 விசைப்படகுகளை அரசுடமையாக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது ராமேஸ்வரம் மீனவர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. மீனவர்களை விடுதலை செய்தது மகிழ்ச்சி அளித்தாலும், மீனவர்களின் வாழ்வாதாரமான 2 படகுகளை இலங்கை அரசுடைமையாக்கியது வேதனை அளிப்பதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் ஓரிரு நாளில் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேரை விடுதலை செய்தது இலங்கை நீதிமன்றம்: 2 விசைப்படகுகளை நாட்டுடைமை ஆக்கவும் உத்தரவு..!! appeared first on Dinakaran.

Related Stories: