சென்னை: திமுக எம்எல்ஏ புகழேந்தி மறைந்ததால் விக்கிரவாண்டி தொகுதி காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தி உடல்நலக்குறைவால் கடந்த ஏப்.6ம் தேதி உயிரிழந்தார். அவரது உடலுக்கு 21 குண்டுகள் முழங்கப்பட்டு முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. புகழேந்தி எம்எல்ஏவின் மறைவால் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. பொதுவாக ஒரு தொகுதியின் எம்எல்ஏ மரணமடைந்தால் அல்லது பதவியை ராஜினாமா செய்தால் அடுத்த 6 மாதத்தில் இடைத்தேர்தல் நடத்தப்படும்.
அந்த வகையில் அடுத்த 6 மாதத்துக்குள் விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனிடையே விக்கிரவாண்டி தொகுதி காலியாக உள்ளதாக சட்டப் பேரவை செயலகம் நேற்று அறிவித்தது. இந்நிலையில், திமுக எம்எல்ஏ புகழேந்தி மறைந்ததால் விக்கிரவாண்டி தொகுதி காலியானது குறித்து இந்திய தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவை செயலகம் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் மூலம் தகவல் தெரிவித்தது. விக்கிரவாண்டி தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அரசிதழில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதையடுத்து, விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது நடத்துவது என்பது குறித்து தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என தெரிகிறது.
The post திமுக எம்எல்ஏ புகழேந்தி மறைவு எதிரொலி!: விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி காலியானதாக அரசிதழில் வெளியீடு..!! appeared first on Dinakaran.