பெப்சி – தயாரிப்பாளர் சங்கங்கள் பிரச்னை மத்தியஸ்தராக உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி நியமனம்: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் என்ற பெயரில் பெப்சிக்கு எதிராக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் புதிய சங்கத்தை தொடங்கி இருப்பதாக கூறி பெப்சி குற்றம்சாட்டி வந்தது. இந்நிலையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் தயாரிக்கும் படங்களில் பெப்சி அமைப்பின் உறுப்பினர்கள் பணியாற்றுவதை நிறுத்த வேண்டும். ஒத்துழைப்பு வழங்க கூடாது என்று தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளன உறுப்பினர்களுக்கு ஏப்ரல் 2ம் தேதி பெப்சி கடிதம் அனுப்பி இருந்தது. இதனால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த மனு நீதிபதி கே.குமரேஷ்பாபு முன்பு கடந்த ஜூன் 30ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, இரு சங்கங்கள் இடையேயான பிரச்னையை பேசி தீர்ப்பதற்கு மத்தியஸ்தராக யாரை நியமிக்கலாம் என்று இரு தரப்பும் கலந்து பேசி முடிவை தெரிவிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டிருந்தார். வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஓய்வு பெற்ற நீதிபதி எம்.கோவிந்தராஜை மதியஸ்தராக நியமிக்கலாம் என்று பெப்சி தரப்பில் வழக்கறிஞர் ஜி.மோகனகிருஷ்ணன், தயாரிப்பாளர் சங்க தரப்பு வழக்கறிஞர் கிருஷ்ணா ரவீந்திரன் ஆகியோர் ஆஜராகி ஒப்புதல் தெரிவித்தனர்.

இதை ஏற்றுக்கொண்டு, இப் பிரச்னைகளுக்கு தீர்வு காண சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எம்.கோவிந்தராஜை மத்தியஸ்தராக நியமித்து நீதிபதி குமரேஷ் பாபு உத்தரவிட்டார். பட தயாரிப்புக்கு இடையூறு இல்லாமல் ஒத்துழைப்பு வழங்குமாறு பெப்சி அமைப்புக்கு உத்தரவிட வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் சங்கம் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதற்கு பெப்சி தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மத்தியஸ்தர் நியமிக்கப்பட்டுள்ளதால், எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று நீதிபதி மறுத்து விட்டார்.

The post பெப்சி – தயாரிப்பாளர் சங்கங்கள் பிரச்னை மத்தியஸ்தராக உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி நியமனம்: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: