பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் கிண்டி ஆளுநர் மாளிகை முன்பு என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை: பாதுகாப்பு பணியில் இருந்த காவலரிடமும் விசாரணை

சென்னை: கிண்டி ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று சோதனை மேற்கொண்டனர். சென்னை கிண்டி ஆளுநர் மாளிகை முன்பு கடந்த அக்ேடாபர் 25ம்தேதி ஒருவர் பெட்ரோல் குண்டுகளை வீசினார். அப்போது, அங்கு பாதுகாப்பில் இருந்த போலீசார், அந்த நபரை மடக்கி பிடித்தனர். விசாரணையில், அவர் சரித்திர பதிவேடு குற்றவாளியான நந்தனம் எஸ்.எம்.நகரை சேர்ந்த ரவுடி கருக்கா வினோத் என்பதும், அவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது
இதையடுத்து போலீசார், கருக்கா வினோத் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மேலும், என்ஐஏ அதிகாரிகளும் நவம்பர் 14ம்தேதி கூட்டுச்சதி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக சம்பந்தப்பட்ட ஆவணங்களை சென்னை காவல்துறை, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளிடம் சில தினங்களுக்கு முன்பு ஒப்படைத்தது.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், முதல்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு என்ஐஏ அதிகாரிகள் நேற்று காலை சோதனை மேற்கொண்டனர். பின்னர், பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்ட இடத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், தடயவியல் அதிகாரிகள் துணையுடன் ஆய்வு செய்தனர். இதனிடையே, பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தின்போது பணியில் இருந்த ஆயுதப்படை காவலர் சில்வானிவை விசாரணைக்காக என்ஐஏ அதிகாரிகள் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர். அவரிடம் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட நாளில் என்ன நடந்தது என்பது தொடர்பாக வாக்குமூலம் பெற திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொள்வதால் ஆளுநர் மாளிகை நுழைவாயில் முன்பு பாதுகாப்பு பணியில் கூடுதல் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், ரவுடி கருக்கா வினோத்துக்கு, பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருக்கலாம் என்ற காரணத்திற்காக, இவ்வழக்கு தேசிய புலனாய்வு முகமை போலீசாருக்கு மாற்றப்பட்டது.

 

The post பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் கிண்டி ஆளுநர் மாளிகை முன்பு என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை: பாதுகாப்பு பணியில் இருந்த காவலரிடமும் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: