21.5.2026 முதல் 27.5.2026 வரை
சாதகங்கள்: மூன்றாம் இடத்தில் உள்ள செவ்வாய், மனதில் துணிச்சலையும், எதையும் முயன்று பார்க்கும் ஆற்றலையும் தரும். வாரத்தின் முதல் சில நாட்கள், குருவின் பார்வை ராசிக்கு உண்டு. அதற்குப் பிறகு ஆறாம் இடத்திற்கு மாறினாலும் கூட, அவருடைய பார்வை தன ஸ்தானத்தில் இருப்பதால், பொருளாதாரத்தில் பெரிய சரிவுகள் இருக்காது. அதேநேரத்தில் சனியின் மீது குருவின் பார்வை விழுவதால், சனியினால் ஏற்படும் தோஷங்கள் கட்டுக் கடங்கி இருக்கும். ராசிக்கு ஐந்தில் சுக்கிரன் இருப்பதால் பிள்ளைகளால் மேன்மை உண்டாகும். பூர்வீகச் சொத்து பிரச்னைகள் தீரும். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மேலதிகாரிகள் உங்கள் எண்ணங்களை ஆதரிப்பார்கள். புனிதத் தலங்களுக்குச் சென்று வரும் வாய்ப்பு உண்டு.
கவனம் தேவை: தனகாரகனான குரு, ஆறாம் இடத்தில் உச்சம் பெறுவதால், காரியங்களைத் துவங்கும்போது தடை ஏற்பட்டு கடைசியில் நிறைவேறும். கடன் வாங்கி செலவு செய்யும் பழக்கத்தை விட்டுவிட வேண்டும். வம்பு வழக்குகளில் காசு பணம் செலவழியும். எனவே, கை பணத்தை சரியான வழிகளில் முதலீடு செய்வது அவசியம். அதன் மூலம் தேவையற்ற செலவுகளைக் குறைக்க முடியும்.
சந்திராஷ்டமம்: 25.5.2026 காலை 9.08 முதல் 27.5.2026 இரவு 7.00 வரை சந்திராஷ்டமம் உண்டு. பேச்சில் கவனமாக இருக்கவும். வாதப் பிரதிவாதங்களில் ஈடுபட வேண்டாம்.
பரிகாரம்: லட்சுமி நரசிம்மரை வணங்குங்கள். நலம் கிடைக்கும்.
