குன்றத்தூர் அருகே புதிதாக நட்டிய பாமக கொடிக்கம்பத்தை நள்ளிரவில் அறுத்து சென்ற மர்ம நபர்கள்: போலீசார் தீவிர விசாரணை

குன்றத்தூர்: குன்றத்தூர் அருகே புதிதாக நட்டிய பாமக கொடிக்கம்பத்தை நள்ளிரவில் மர்ம நபர்கள் அறுத்து சென்றனர். இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குன்றத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட பல பகுதிகளில் நேற்று பாமக சார்பில் புதிய கொடிக்கம்பங்கள் நடப்பட்டு கொடியேற்றப்பட்டது. அதே போன்று, குன்றத்தூர் அடுத்த கொல்லச்சேரி நான்கு ரோடு சந்திப்பிலும் நேற்று நிர்வாகிகள், தொண்டர்கள் ஒன்றிணைந்து கட்சி கொடியேற்றி அனைவருக்கும் இனிப்பு வழங்கினர். இந்நிலையில் இன்று காலையில் அந்த கொடிக்கம்பத்தை மர்ம நபர்கள் அறுத்து சென்றது தெரிய வந்தது. இதைபார்த்ததும் கட்சி தொண்டர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். இந்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பரவியது. ஏராளமான கட்சி தொண்டர்கள் சம்பவ இடத்தில் திரண்டனர்.

பின்னர் திடீரென பிரதான சாலையில் அமர்ந்து பாமகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர். தகவலறிந்து குன்றத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற பாமகவினரிடம் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் அறுத்து எடுக்கப்பட்ட கொடிக்கம்பத்தில் மீண்டும் புதிதாக கொடிக்கம்பம் நட்டு, உடனடியாக புதிய கொடியும் ஏற்றப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து, இரவோடு இரவாக கொடிக்கம்பத்தை அறுத்து சென்ற மர்ம நபர்கள் யார், எதற்காக இப்படி செய்தார்கள், வேண்டும் என்றே பிரச்னை ஏற்படுத்த இப்படி செய்தார்களா என்பது போன்ற கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இச்சம்பவம் குன்றத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

The post குன்றத்தூர் அருகே புதிதாக நட்டிய பாமக கொடிக்கம்பத்தை நள்ளிரவில் அறுத்து சென்ற மர்ம நபர்கள்: போலீசார் தீவிர விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: